சென்னை: கர்நாடகத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த போது, பாஜக., பெரும்பான்மை பலம் பெற்றுவிடும் என்று மதியம் தெரியவந்தது. அந்த நேரத்தில், எடியூரப்பாவுக்கு முந்திக் கொண்டு வாழ்த்து தெரிவித்தார் திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.
அந்த வாழ்த்தில், புதிதாக பொறுப்பேற்கும் பாஜக., அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழக காவிரி உரிமையை மீறாமல் விரைவில் தமிழகத்திற்கு உரிய காவிரி நீரைத் திறக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன் என்று தமிழில் டிவிட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்.
அதாவது, தனது டிவிட்டர் பதிவில் உள்ள கருத்து, எடியூரப்பாவுக்கு புரியாவிட்டாலும், தனது அரசியல் கருத்து தமிழர்களுக்குப் புரிந்தால் போதும் என்ற நிலையில் அவ்வாறு பதிவிட்டிருந்தார். இதில், இதுவரையில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததையோ, காங்கிரஸ் ஆட்சியாளர்களிடம் தாம் காவிரி நீர் குறித்து இதுவரை வாய்திறக்காததையோ வெளிப்படுத்தவில்லை..
கூட்டணி தர்மத்தின் பால், தனது மாநிலமான தமிழகத்தின் நலனைக் காவு கொடுத்த ஸ்டாலின், மத்திய அரசை மட்டுமே குறை கூறி சாடி வந்தார். தொடர்ந்து மத்திய பாஜக.,வின் ஊதுகுழல் என்று கூறி தமிழக அதிமுக., அரசையும் சாடி, அரசு கூட்டியிருந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டதுடன், கூட்டத்தில் பேசாத விஷயங்களையும் வெளியில் பத்திரிகையாளர்களிடம் சொல்லி, மத்திய மாநில அரசுகளுக்கு இடையே, கருத்துவேறுபாடுகளை மூட்டி விட்டார்.
இப்போது, மீண்டும் காங்கிரஸ் தயவில் குமாரசாமியின் ஆட்சி அமையவுள்ள சூழல் எழுந்துள்ளது. இந்நிலையில், குமாரசாமிக்கும் ஒரு வாழ்த்துப் பதிவினை வெளியிட்டார் ஸ்டாலின். ஆனால் இந்த முறை, கன்னட வெறியர்களான, தமிழக விரோதிகளான மஜத.,வினருக்கு பயந்து கொண்டு, தமிழில் பதிவிடாமல், ஆங்கிலத்தில் பதிவிட்டார். அதிலும், காங்கிரஸ் மஜத., என மதசார்பற்ற கட்சிகள் இணைந்து செயல்படும் இந்த மாற்றம் இனி வரும் தேர்தல்களிலும் தொடரட்டும் என்று கூறினாரே தவிர, காவிரி நீரை திறக்க குமாரசாமி அரசு உறுதி கூற வேண்டும் என்று குறிப்பிடவே இல்லை.
ஸ்டாலினின் இந்தப் போக்கை ஊடகங்களோ அரசியல் கட்சிகளோ பெரிதாக விமர்சனமோ விவாதமோ செய்யவில்லை. ஆனால், சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
செயல் தலைவர் ஸ்டாலினின் செயலுக்கு விளக்கம் தருவது போல் ஒருவர் இட்டிருந்த கருத்து கவனம் பெற்றது. ஏற்கெனவே காவிரி நீர் கேட்டதற்கு, காவிரியில் நீர் வராது, கன்னடர்களின் சிறு நீர்தான் வரும் என்று பதிலளித்த குமாரசாமியிடம், இப்போது காவிரி நீர் குறித்து கேட்டால், வீட்டுக்கு சிறுநீரை அனுப்பிவிட்டாரெனில் என்ன செய்வது என்ற பயத்தினால்தான் ஸ்டாலின் அவ்வாறு கேட்கவில்லை என்று கலாய்த்திருக்கிறார் ஒருவர்.
எடியூரப்பாவுக்கு வாழ்த்து சொன்னதோடு காவிரி நீரையும் கேட்டவரு
குமாரசாமிக்கிட, தாகத்துக்கு ஒரு அவுன்ஸ் தண்ணி குடுயான்னுகூட கேட்கவில்லை!!
என்ன ஸ்டாலின் இப்டி ஆகிட்டீங்க pic.twitter.com/zuN8ACBiwX
— மேரி மகதலேனா 🌷 (@kani_ven) May 20, 2018
இன்னொருவர், ஸ்டாலினுக்குத் தெரியும், இந்த விவகாரம் பாஜக.,வினால் மட்டுமே தீர்க்கப் படக் கூடியது என்று! அதனால்தான், மத்திய அரசையும், மாநிலத்தில் அமைவதாக இருந்த பாஜக., அரசையும் வலியுறுத்திக் கேட்டார் என்று கூறியுள்ளார்.
இந்தக் கருத்தின் படியே, எடியூரப்பா ஆட்சியில் இருந்த இரண்டரை நாளுக்குள் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு கர்நாடக அரசுத் தரப்பு மறுப்பு தெரிவிக்காமல், உச்ச நீதிமன்றத்தில் வழிமொழிந்தது. மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக., அரசு இருந்த போதுதான் இது சாத்தியமானது. ஆனால், காங்கிரஸ் அரசு மாநிலத்தில் இருந்த போது, வாரியமா ஸ்கீமா என்று குழப்பி, பல நாட்கள் தாமதத்தை ஏற்படுத்த வைத்து, தமிழக மக்களுக்கு காவிரி நீர் கிடைக்காமல் துரோகம் செய்து வந்தது வரலாற்றில் பதியப்பட்டு விட்ட உண்மையாகி விட்டது!