சென்னை: பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் மே 23 ஆம் தேதி வெளியாகின்றன. இந்தத் தேர்வு முடிவுகள், மாணவர்கள் அளித்துள்ள மொபைல் போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். ஆக அனுப்பப் படும்.
10ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு, கடந்த மார்ச் மாதத்தில் துவங்கி ஏப்.20 வரை நடைபெற்றது. சுமார் 10.2 லட்சம் மாணவ மாணவியர், தனித் தேர்வர்கள் பங்கேற்றனர்.
விடைத்தாள் திருத்தும் பணிகள் மே 6இல் முடிந்ததை அடுத்து மாவட்ட வாரியாக மதிப்பெண் பெற்று இறுதி மதிப்பெண் பட்டியல் மற்றும் தேர்வு முடிவுகள் தயாரிக்கப்பட்டன. இந்தப் பணிகள் நேற்று நிறைவடைந்ததை அடுத்து, தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி 23ஆம் தேதி வெளியிடப்பட உள்ளன.
மாணவர்கள் வழங்கியுள்ள மொபைல் எண்ணுக்கு இந்தத் தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ்.,ஸாக மதிப்பெண் விவரத்துடன் அனுப்பி வைக்கப்படும். வழக்கம்போல், முடிவுகளை இணையதளம் வாயிலாகவும் தெரிந்து கொள்ளலாம்.
10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளுக்கும் ‘ரேங்கிங்’ முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளில் மாநில, மாவட்ட வாரியாக முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்கள் குறித்த விவரங்கள் இந்த முறை இடம்பெறாது.