புது தில்லி: அசாமில் என்.ஆர்.சி. வெளியிடப்பட்டதை அடுத்து, அண்டை மாநிலங்களான மேகாலயா, திரிபுராவிலும் என்.ஆர்.சி. கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
நேஷனல் ரெஜிஸ்டர் ஆஃப் சிட்டிசன் எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு கடந்த ஜூலை 30ஆம் தேதி வெளியிடப் பட்டது. அசாம் மாநிலத்தில் வெளியிடப் பட்ட இந்தப் பட்டியலின்படி, மாநிலத்தின் பூர்வீக குடிகள் அல்லாமல், வங்கதேசத்தில் இருந்து அசாமில் ஊடுருவிய சுமார் 40லட்சம் பேரின் பெயர்கள் இந்தப் பட்டியலில் விடுபட்டுப் போயின. இதனால், அந்த 40 லட்சம் பேரும் நாட்டை விட்டு வெளியேற்றப்படலாம் என செய்திகள் பரவின.
இந்நிலையில் அசாமின் அண்டை மாநிலங்களான மேகாலயா, திரிபுராவிலும் என்.ஆர்.சி. பட்டியலைக் கொண்டுவந்து, தகவலை வெளியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. குறிப்பாக, திரிபுராவில் ஐ.என்.பி.டி., ஐ.பி.எப்.டி. உள்ளிட்ட பூர்வீக குடி மண்ணின் மைந்தர்கள் அமைப்பைச் சேர்ந்தவர்களும், பழங்குடியினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி ஐபிஎஃப்டி அமைப்பினர் வரும் ஆக.23ம் தேதி மாபெரும் பேரணி ஒன்றுக்கு திட்டமிட்டுள்ளனர்.
மேகாலயாவில் கே.எஸ்.யு எனப்படும் காஸி ஸ்டூடண்ட் யூனியன் – காஸி மாணவர் கூட்டமைப்பினர், தங்களது பழங்குடியின கலாசாரத்தைப் பாதுகாக்க வேண்டும் எனக் கூறி, என்.ஆர்.சி. போன்ற பட்டியல் முறையைக் கொண்டு வர வலியுறுத்தி பிரசாரம் செய்யத் தொடங்கியுள்ளனர். கேஎஸ்யு குழுவினர், அமைப்பின் தலைவர் எல்,.மார்ஞர் தலைமையில் மாநில துணை முதல்வர் பிரஸ்டோன் சின்சாங்கை புதன்கிழமை சந்தித்து மனு கொடுத்துள்ளார். மேலும், கேஎஸ்யு ஊடுருவல் சோதனைசாவடி என அங்கங்கே கேட் அமைத்து, மேகாலயாவின் கிழக்கு ஜெயின்டியா மலைப்பகுதியில் வங்கதேசத்தினர் ஊடுருவலை கண்காணித்து வருகின்றனர்.