செங்கோட்டை: நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் உள்ள குண்டாறு அணைக்கட்டின் மேல் பகுதியில் உள்ள குண்டாறு தனியார் தோட்ட அருவிகளில் குளிக்கவும், சுற்றிப் பார்க்கவும் வந்திருந்தார் கிரிக்கெட் வீரர் தோனி.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தென்மேற்குப் பருவமழைக் காலமான ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் குற்றாலத்தில் சீசன் களை கட்டூம். இந்த சீசன் காலத்தில் உயர்ந்து நிற்கும் மேற்குத் தொடர்ச்சி மலை சிகரப் பகுதிகளில் மலையைத் தொட்டு தழுவிச் செல்லும் மேகக் கூட்டங்களும், போகிற போக்கில் அப்படியே சாரல் மழையைப் பொழிந்துவிட்டுச் செல்லும் மேகங்களும், இதமாக வீசும் தென்றல் காற்றும் இயற்கை ரசிகர்களின் ஆனந்தக் கொண்டாட்டம்.
தற்போது சீசன் களை கட்டியிருப்பதால், மலைப் பகுதிகளில் பெய்து வரும் சாரல் மழை காரணமாக இங்குள்ள மலைகளில் இருந்து ஏராளமான அருவிகள் அங்கங்கே கொட்டி வருகின்றன. இங்குள்ள குற்றாலம், ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளைத் தாண்டி மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலுள்ள தனியார் எஸ்டேட்களில் பலர் அருவிகளை உருவாக்கியுள்ளனர். இந்த அருவிகளில் ஆனந்தமாக நீராட முக்கியப் புள்ளிகள் வந்து செல்வதுண்டு.
குறிப்பாக செங்கோட்டை அருகிலுள்ள குண்டாறு நீர்த்தேக்க பகுதியில் ஏராளமான தனியார் எஸ்டேட்களில் அருவிகள் உள்ளன. இங்கும் குளிப்பதற்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இந்த தனியார் எஸ்டேட் அருவியில் குளிப்பதற்காக குண்டாறு நீர்தேக்கம் பகுதிக்கு பிரபல கிரிக்கெட் வீரர் தோனி வந்தார். அவரைக் காண ஏராளமானவர்கள் தனியார் விடுதி முன்னர் திரண்டனர். இதனைத் தொடர்ந்து அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொள்ளாமல் செங்கோட்டை காவல்துறை ஆய்வாளர் சுரேஷ்குமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பாட்டு தோனியை பாதுகாப்பாக தனியார் அருவிக்கு குளிக்க அனுப்பி வைத்தனர்.
தனியார் விடுதியில் இருந்து வெளியே வரும் தோனி.. (வீடியோ)