சேலம்: டிடிவி தினகரனைத் தவிர்த்து அதிமுக.,வில் இருந்து பிரிந்து சென்றவர் யார் வந்தாலும் கட்சியில் ஏற்றுக்கொள்வோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடியில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போதுஅவர் கூறியவை:
- புயல் பாதித்த மாவட்டங்களுக்கான நிவாரண உதவிகளின் தொடர்ச்சியாக, புதுக்கோட்டைக்கு அதிமுக., சார்பில் 2 லாரிகளில் 30 டன் அரிசி அனுப்பி வைக்கப்படுகிறது.
- புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணத்தை அரசு செய்து வருகிறது.
- நிவாரணத் தொகை உரியவர்களுக்கு உரிய நேரத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
- மின்கட்டமைப்புகளுக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. கடுமையாக முயன்று, பெரும்பாலான இடங்களில் மின் கட்டமைப்பு சீரமைக்கப்பட்டு விட்டது.
- புயலால் வீடிழந்தவர்களுக்கு 1 லட்சம் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும்
- மேகேதாட்டு விவகாரத்தில் கர்நாடகம் மற்றும் மத்திய நீர்வளக் குழுமத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குகள் தொடர்ந்துள்ளது.
*அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து ஒரு சிலர் வேறு கட்சிக்கு செல்வதாக வெளியான தகவல் குறித்து கேட்டால்… அது அவர்களது விருப்பம். அதேநேரம், பிரிந்து சென்றவர்கள் அனைவரும் எங்களோடு இணைந்து பணியாற்ற வேண்டும் என ஏற்கெனவே அழைப்பு விடுத்துள்ளோம். டிடிவி தினகரன் தவிர்த்து மற்ற அனைவருக்கும் இது பொருந்தும் – என்றார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!