சென்னை: அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களை கொண்ட பிளாஸ்டிக் கவர்களை தொடர்புடைய நிறுவனத்திற்கே திருப்பி அனுப்பலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஒருமுறை பயன்படுத்தக்கூடிய மக்காத பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு தீர்வு காணும் வகையில் பால், தயிர், எண்ணெய், மருத்துவ பொருட்களுக்கான உறைகள் தவிர பிளாஸ்டிக்கால் ஆன தாள்கள், பைகள், தட்டுகள், டீ கப்புகள், தண்ணீர் பாக்கெட்டுகள், கைப்பைகள் உள்ளிட்ட 14 பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்தது.
ஜனவரி 1ஆம் தேதி முதல் இந்தத் தடை உத்தரவு தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.
தடை அமல்படுத்தப் பட்டுள்ளதால், பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தல், இருப்பு வைத்தல், விற்பனை செய்தல் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த சில நாட்களாக, உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள்,. தனிப்படை அதிகாரிகள் கடைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டு, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பெரு நிறுவனங்களின் பிஸ்கட், நூடுல்ஸ், நொறுக்குத்தீனி கவர்களுக்கு தடை இல்லை எனவும், சிறு குறு நிறுவன தயாரிப்புகளின் பிளாஸ்டிக் தயாரிப்புகளுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப் பட்டன. இந்த அரசு, பெரு நிறுவனங்களுக்கு சாதகமாகவும், சிறு வியாபாரிகளுக்கு பாதகமாகவும் செயல்படுவதாக, வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் சிலர் குற்றம் சாட்டி செய்தி பரப்பினர்.
இந்நிலையில், தமிழக அரசு இந்தக் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ளது. அதன்படி, அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களை கொண்ட பிளாஸ்டிக் கவர்களை சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கே திருப்பி அனுப்ப திட்டம் இருப்பதாகக் கூறியுள்ளது. மேலும், பெரு நிறுவன பொருட்களின் கவர்களை சேகரிக்க மாவட்டந்தோறும், மையங்கள் அமைக்கவும் அரசு பரிசீலித்து வருவதாகவும் அரசு விளக்கம் அளித்துள்ளது.