கும்பகோணத்தை அடுத்த திருபுவனம் பகுதியில் கடந்த செவ்வாய் நள்ளிரவு இஸ்லாமிய மதமாற்றத்தை எதிர்த்தார் என்ற காரணத்துக்காக, அடிப்படைவாத பிரிவினைவாதிகளால் வெட்டிக் கொல்லப்பட்ட ராமலிங்கம் படுகொலைக்கு, மூன்று நாட்கள் கழித்து இன்று மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.
அவர் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது:
கும்பகோணம் ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
இந்த கொலையில் ஈடுபட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தி விரைவில் தண்டனை பெற்றுக் கொடுத்து இதுபோன்ற வன்முறைகளுக்கு முடிவு கட்ட வேண்டும்!
இதுபோன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும், எந்த மதத்தினராக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து தமிழகத்தில் நிலவும் பாரம்பரியமிக்க மதநல்லிணக்கத்தை போற்றிப் பாதுகாக்க அ.தி.மு.க அரசு முன்வர வேண்டும்.
என்று குறிப்பிட்டிருக்கிறார் மு.க.ஸ்டாலின்.
அண்மைக் காலமாக, இஸ்லாமிய திருமண விழாவில் சென்று, இந்துக்களின் திருமணத்தைக் குறித்து இழிவாகப் பேசி, அதனால் பலரது கண்டனங்களைப் பெற்றுக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின். மேலும், இஸ்லாமிய கிறிஸ்துவ நிதி உதவிகளின் பின்னணியில் ஓர் ஏஜெண்டாக இயங்கி வரும் திருமாவளவனின் சனாதனத்தை வேரறுப்போம் என்ற மாநாட்டில் கலந்து கொண்டு, இந்து மதத்துக்கு எதிரான கருத்துகளையும் பேசினார். இதனால் இந்துக்கள் பலர் கொதிப்படைந்தனர். இதைக் கேட்டு, திமுக.,வில் இருக்கும் உணர்வுள்ள இந்து தொண்டர்களே கட்சியை விட்டு விலகி, கடிதம் கொடுத்து திமுக.,வுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.
இந்நிலையில், திமுக.,வுக்கு மக்களின் செல்வாக்கு சரிந்து வருகிறது என்ற தகவலும், இருக்கின்ற இஸ்லாமிய ஓட்டு வங்கி சில பிரிவுகளாகப் பிரிந்துவிடும் என்ற அரசியல் கணக்கும் இப்போது ஸ்டாலினை இப்படி ஒரு கண்டனத்தைத் தெரிவிக்கத் தூண்டியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இதனிடையே, சமூக வலைத்தளங்களில் இந்த டிவிட் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டாலினா இப்படி ஒரு டிவீட் போட்டிருப்பது, இருக்காது என்றும், அது ஏதாவது போலி தள செய்தியாக இருக்கும் என்றும் கருத்து தெரிவித்தனர். சிலர், அட்மின் தவறுதலாகப் போட்டுவிட்டார் என்று ஏற்கெனவே இது போல் போட்டு தூக்கிவிட்டது போல், இந்த முறையும் ஆகிடப் போவுது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.