தில்லியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உண்ணாவிரதப் போராட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்! நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி, இன்று தில்லியில் உள்ள ஆந்திர பவனில் 12 மணி நேர தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு.
இதற்காக ஆந்திராவில் இருந்து இரண்டு ரயில்கள் மூலம் மக்களைத் திரட்டிக் கொண்டு, தில்லிக்கு வந்துள்ளார் நாயுடு.
இன்று காலை தில்லியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்திய சந்திரபாபு நாயுடு அங்கிருந்து கறுப்புச் சட்டை அணிந்தவாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டார்.
இந்தப் போராட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் தொண்டர்கள் உட்பட பொதுமக்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சில அமைப்புகள் என கலந்து கொண்டுள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் நாயுடுவுக்கு ஆதரவு கொடுக்க, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, நாயுடுவுக்கு ஆதரவாக காலை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பங்கேற்றார். ஆச்சரியப் படும் விதத்தில் அவரது பங்கேற்பு இருந்தது. காரணம், ஆந்திரப் பிரதேசத்தில் காங்கிரஸ் நாயுடுவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு தனியே போட்டியிடுகிறது. அதே நேரம், ஆந்திரப் பிரதேச பிரச்னைக்கும் மூல காரணமாக காங்கிரஸே இருந்துள்ளது. முன்னேற்பாடு ஏதுமின்றி அவசர கதியில் ஆந்திரத்தை இரண்டாகப் பிரித்து, இன்றளவும் ஆந்திரத்தில் பிரச்னைகள் அதிகரிக்க காங்கிரஸே காரணமாக இருந்துள்ளது. இந்நிலையில், தேர்தலை கருத்தில் கொண்டு நாயுடு நடத்தும் உண்ணாவிரதக் கூட்டத்தில் ராகுல் பங்கேற்றிருக்கிறார்.