கவர்ச்சிகரமான மோசடி முதலீட்டு திட்டங்களுக்கு தடை விதிக்கும் மசோதா, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
கவர்ச்சிகரமான வட்டி அளிப்பதாகக் கூறி மக்களை ஏமாற்றும் மோசடி முதலீட்டு திட்டங்களுக்கு தடை விதிப்பதற்கான மசோதாவை மத்திய நிதி அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தார்.
மோசடி நிதி நிறுவனங்களிடம் இருந்து முதலீட்டாளர்களை பாதுகாப்பதுடன், மோசடி செய்பவர்களுக்கு கடுமையான தண்டனையும், அபராதமும் அளிக்க வகை செய்யும் இந்த மசோதாவில், பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் பொதுமக்களுக்கு இடம்பெற்றுள்ளன. அதே நேரம், இவ்வாறு கவர்ச்சிகர விளம்பரங்கள் அளித்து மோசடி செய்பவர்களின் சொத்துகளை பறிப்பதற்கு வகை செய்யும் அம்சமும் இந்த மசோதாவில் இடபெற்றுள்ளது.
மேலும், இவர்களால் ஏமாற்றப்பட்ட முதலீட்டாளர்களுக்கு இழப்பீடு அளிப்பதற்கும் மசோதாவில் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. இந்த மசோதா, இன்று மக்களவையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
மேற்கு வங்கத்தில் சாரதா சிட்பண்ட் மூலம் ஆளூம் திரிணமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களே நிதி முறைகேட்டில் ஈடுபட்டு கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டிக் கொண்டனர். இதனால் லட்சக் கணக்கான பொது மக்கள் ஏமாற்றப் பட்டனர். வாழ வழியின்றி நூற்றுக் கணக்கானோர் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர்.