தமிழக மக்களின் குரல் தில்லியில் ஒலிக்க வேண்டும் எனவும், தமிழக உறுப்பினர்கள் அதிகளவு அமைச்சரவையில் இடம்பெற வேண்டுமென பிரதமர் விரும்புகிறார் என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் செய்தியாளர்களிடம் கூறினார். தமிழகத்தில் அமைய இருக்கும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த இங்கு வந்திருக்கிறேன்; கூட்டணியால் கிடைக்கும் வெற்றி பிரதமர் மோடிக்கு வலு சேர்ப்பதாக இருக்கும் என்றார் பியூஷ் கோயல்!
தமிழகம் வந்துள்ள மத்திய அமைச்சரும் தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், பாஜக., தமிழக பொறுப்பாளராக என்னை நியமித்ததில் மிக்க மகிழ்ச்சி. தமிழக மக்களுடன் நெருங்கிய தொடர்பு எனக்கு உண்டு.
தமிழக மக்கள் மீது பிரதமர் மோடி அதிக அக்கறை கொண்டுள்ளார். நாட்டில் இளைஞர்கள், பெண்களின் நலனில் பிரதமர் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தேர்தலுக்கு பின்னர் அமையவிருக்கும் அமைச்சரவையில், அதிக தமிழக உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்று மோடி கவனம் செலுத்தி வருகிறார்.
தமிழகத்தில் வலுவான கூட்டணியை பாஜக., அமைக்கும். தமிழக மக்களின் நலனுக்காக எங்கள் கூட்டணி தொடர்ந்து உழைக்கும். இங்கே கிடைக்கும் வெற்றி பிரதமர் மோடிக்கு வலு சேர்க்கும் வகையில் அமையும்.,. என்றார்.
இந்நிலையில், மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து பேச பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் அமைச்சர் தங்கமணியுடன் சந்தித்துப் பேசினார்.