தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக., வெற்றி பெறும் அளவுக்கு வலுவான கூட்டணி அமைக்கும் என்று பேசினார் பாஜக., தேசியத் தலைவர் அமித்ஷா!
ஈரோட்டில் நடைபெற்ற நெசவாளர்கள் கூட்டத்தில் பேசினார் அமித்ஷா. அப்போது அவர், பாஜக., தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய விஷயங்கள் குறித்து நீங்களும் கருத்துக் கூறலாம். பொதுத் தேர்தலில் மோடி தலைமையிலான அணி வெற்றி பெற உறுதி ஏற்க வேண்டும். மக்களின் தேவைகளைக் கேட்டறிந்து அதனை தேர்தல் அறிக்கையில் இணைக்க உள்ளோம். ஒவ்வொரு பிரிவினரின் தேவை அறிந்து தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது.
விசைத்தறி, கைத்தறி நெசவாளர்களின் தேவைகளை அறிந்து கொள்ள வந்துள்ளேன். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பின்னடைவைச் சந்தித்த நெசவுத் தொழிலை, மீட்க கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழகத்தில், ஜவுளித்துறைக்காக மத்திய அரசு ரூ.1,230 கோடி ஒதுக்கியுள்ளது.
திமுக – காங்கிரஸ் கூட்டணி முன்னேற்றத்திற்கான கூட்டணியில்லை! அது ஊழல் கூட்டணி. ஒரு பக்கம் ஊழல் கூட்டணி உள்ளது. மறுபக்கம் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றும் கூட்டணி உள்ளது.
ராகுலை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவித்ததை கூட்டணிக் கட்சிகளே ஏற்கவில்லை. 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருந்த திமுக தமிழகத்திற்காக என்ன செய்தது என்று கேள்வி எழுப்பினார் அமித் ஷா.