காஷ்மீர் புலமாவாவில் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தற்கொலைப் படைத் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 44 பேர் பலியான சம்பவத்தை அடுத்து, பிரதமர் மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் சிஆர்பிஎப் வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீர மரணமடைந்த வீரர்களின் எண்ணிக்கை 44ஆக அதிகரித்துள்ளது. இச்சம்பவத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், அருண் ஜெட்லி, காங்கிரஸ் தலைவர் ராகுல் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் குறித்து, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் பிரதமர் மோடி தொலைபேசியின் அவசர ஆலோசனை நடத்தினார். தாக்குதல் சம்பவம் தொடர்பாக உளவுத்துறை இயக்குனர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், ராணுவ உயரதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்.
என்.ஐ.ஏ., குழு: பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய புல்வாமா பகுதிக்கு என்.ஐ.ஏ குழு நாளை(பிப்.,15) செல்கிறது. ஐ.ஜி அந்தஸ்து கொண்ட அதிகாரி தலைமையில் 12 பேர் கொண்ட குழு விசாரணை நடத்த உள்ளது.
இதனிடையே, தாக்குதல் நடத்திய பயங்கரவாதி அடையாளம் கண்டுபிடிக்கப் பட்டார். காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதியின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, போலீசார் கூறுகையில், தாக்குதல் நடத்திய பயங்கரவாதி அடில் அகமது என தெரியவந்துள்ளது. அவனுக்கு, அடில் அகமது காடி தக்ரன்வாலா, வாகாஸ் கமாண்டோ ஆப் கண்டிபாக் என்ற பெயரும் உள்ளது. காஷ்மீரின் காக்கிபோரா பகுதியை சேர்ந்த அவன், கடந்த ஆண்டு தான் பயங்கரவாத அமைப்பில் இணைந்துள்ளான்.
உரியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின் நடந்த மற்றொரு மோசமான இந்த சம்பவம் நடந்தவுடன் இவனது அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவனது புகைப்படமும், அவன் குறித்த வீடியோவும் வேகமாக பரவ துவங்கின. அந்த வீடியோவில், ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் கொடி பின்னணியில் ஆயுதங்களுடன் போஸ் கொடுத்துள்ளான்.. என்று கூறியுள்ளனர்.