புது தில்லி: ‘புல்லட்’ ரயிலுக்கு, பொருத்தமான பெயர் மற்றும் சின்னம் வடிவமைக்கும் போட்டியை, மத்திய அரசு அறிவித்துள்ளது.
நம் நாட்டின் முதல் புல்லட் ரயில் மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து குஜராத்தில் உள்ள ஆமதாபாத் வரை இயக்கப்படுகிறது. இந்த புல்லட் ரயில் சேவைக்கு ஒரு பெயரும் சின்னமும் (லோகோ) வடிவமைக்க ரயில்வே ஒரு போட்டி அறிவித்துள்ளது.
பெயர் மற்றும் சின்னம் வடிவமைப்பவருக்கு பணப் பரிசு, சான்றிதழ் வழங்கப்படும். இது தொடர்பான மேலும் விவரங்களை அறிய www.mygov.in என்ற அரசின் இணையதளத்தில் சென்று தெரிந்து கொண்டு, அதில் பதிவு செய்யலாம். மார்ச் 25ஆம் தேதிக்குள் இதனை மேற்கொள்ள வேண்டும்.
ஒரு குழுவின் மூலம் பெயரும் லோகோவும் தேர்ந்தெடுக்கப்படும். லோகோ டிசைனுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசும், பெயர் சூட்டலுக்கு ரூ. 50 ஆயிரம் பரிசும் அறிவிக்கப் பட்டுள்ளது. இதே போன்ற ஒரு போட்டி 2017ல் நடத்தப் பட்டது.
மேலும், சென்னை-மைசூர், சென்னை-பெங்களூர் உட்பட பத்து புதிய வழித்தடங்களில் அதிவிரைவு புல்லட் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
தில்லியில் இருந்து மும்பை, கொல்கத்தா, வாராணசி, போபால், அமிர்தசரஸ், ஆமதாபாத் ஆகிய 6 வழித்தடங்களிலும் நாக்புர்-மும்பை மற்றும் பாட்னா-கொல்கத்தா வழித்தடத்திலும் புல்லட் ரயில்களை இயக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக 10 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் திட்டம் வகுக்கப்பட்டு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 2025 அல்லது 2026ஆம் ஆண்டில் திட்டம் நிறைவேறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே மும்பை-ஆமதாபாத் இடையிலான புல்லட் ரயிலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் தொடங்கப் பட்டுள்ளன. இது 2022இல் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
மேலும், சரக்கு ரயில்களின் வேகத்தை அதிகப்படுத்தவும் சரக்குப் போக்குவரத்தை இரட்டிப்பாக்கவும் ரயில் தண்டவாளங்களை சீரமைக்கும் பணிகளுக்கும் ரயில்வே நிர்வாகம் திட்டங்களை வகுத்து வருகிறது.