தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் நலம் குறித்து விசாரிக்கச் வந்த துணை முதல்வர் ஓபிஎஸ், தேர்தல் கூட்டணி குறித்தும் பேசினார் #AIADMK #DMDK #OPS #Vijayakanth
இது குறித்து தேமுதிக அலுவலகம் வெளியிட்ட பத்திரிக்கை செய்தியில், அதிமுக-வின் ஒருங்கிணைப்பாளர், தமிழக துணை முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் இன்று (04.03.2019) தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்களை மரியாதை நிமித்தமாகவும், நலம் விசாரித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
பாராளுமன்ற தேர்தலில் மெகா கூட்டணி அமைப்பது குறித்தும் பேசப்பட்டது. இந்நிகழ்வில் மீன் வளத்துறை அமைச்சர் திரு.ஜெயக்குமார் அவர்களும், தேமுதிக கழக பொருளாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களும், கழக அவைத்தலைவர் திரு.டாக்டர்.வி.இளங்கோவன் அவர்களும், கழக கொள்கை பரப்பு செயலாளர் திரு.அழகாபுரம்.ஆர்.மோகன்ராஜ்,Ex:MLA., கழக துணை செயலாளர் திரு.எல்.கே.சுதீஷ் அவர்களும், திரு.ப.பார்த்தசாரதி, Ex:MLA., திரு.எ.எஸ்.அக்பர் அவர்களும் உடன் இருந்தனர். – என்று குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக விஜயகாந்த்தின் சாலிக்கிராமம் இல்லத்துக்கு வந்திருந்த துணை முதல்வர் ஓபிஎஸ்., அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் விஜயகாந்த்திடம் அவரது உடல் நலம் குறித்து விசாரித்தனர். தொடர்ந்து, பிரேமலதா விஜயகாந்திடம் கூட்டணி குறித்தும், இடங்கள் குறித்தும் பேசிக் கொண்டிருந்தனர்.
இந்த சந்திப்பு முடிந்து வெளியே வந்த ஓபிஎஸ், செய்தியாளர்களிடம் பேசும்போது குறிப்பிடுகையில், விஜயகாந்த்தின் உடல் நலம் குறித்து விசாரிக்க வந்தோம் என்றார். உடனே செய்தியாளர்கள் விடாப்பிடியாக கூட்டணி குறித்தும், வரும் மார்ச் 6ம் தேதி நடைபெறவுள்ள வண்டலூர் மாநாடு குறித்தும் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், விஜயகாந்த் கூட்டணியில் இணைவார்; மாநாட்டில் தேமுதிகவும் கலந்து கொள்ளும் என்று கூறிவிட்டு நகர்ந்தார்.
இருப்பினும், விடாப்பிடியாக பிரேமலதா தரப்பு சீட் எண்ணிக்கையிலும் சட்டமன்ற இடைத் தேர்தல் தொகுதிகளிலும் குறியாக இருப்பதால், பேச்சுவார்த்தை ஒருமுடிவினை எட்டவில்லை!