புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி வாராணசி தொகுதியில் மீண்டும் போட்டியிட உள்ளதாக பாஜக., நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
தில்லியில் பாஜக., நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. பாஜக., தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி, தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அடுத்து வரவுள்ள மக்களவைத் தேர்தலை சந்திப்பது குறித்தும், நாட்டில் எழுந்துள்ள பல்வேறு சூழல்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப் பட்டது. அப்போது, வரும் மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி மீண்டும் உபி., மாநிலம் வாராணசி தொகுதியில் மீண்டும் போட்டியிட வேண்டும் என்று முடிவு செய்ததாகக் கூறப் படுகிறது.
முன்னதாக, காஷ்மீர் புல்வாமா தாக்குதல், பாகிஸ்தானில் பாலக்கோட்டில் இந்திய விமானப்படை நடத்திய பதில் தாக்குதல் இதன் பின்னர் எழுந்துள்ள அரசியல் விவகாரங்கள், குறிப்பாக பாலாகோட் தாக்குதலுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோருவது என பல்வேறு விவகாரங்களின் பின்னணியில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.