புதுதில்லி: ”ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் திருடப்படவில்லை; அவற்றின் நகல்களை மனுதாரர்கள் பயன்படுத்தி உள்ளனர் என்று உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நேற்று அரசு தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் தெரிவித்தார்.
ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாகத் தொடரப்பட்ட வழக்கு விசாரணை மார்ச் 7 வியாழன் அன்று நடைபெற்ற போது, விசாரணையில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் திருடப்பட்டு அவை நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறி இருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதை அடுத்து, வழக்கம் போல் எதிர்க் கட்சிகளும் மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடி மீது கடுமையாக விமர்சனங்களை முன்வைத்தன.
வழக்கு ஆவணங்கல் திருடப்பட்டன என்றால் இது குறித்து உடனே விசாரணை நடத்த வேண்டும் என்று ராகுல், மாயாவதி, மம்தா பானர்ஜி, ஷரத் பவார் உள்ளிட்டோர் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் தாம் அளித்த பதில் குறித்து விளக்கம் அளித்துள்ள கே.கே. வேணுகோபால், ரபேல் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் திருடு போகவில்லை.
யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி மற்றும் பிரசாந்த் பூஷண் ஆகியோர் தாக்கல் செய்துள்ளது ஒப்பந்த ஆவணத்தின் அசல் பிரதிகளின் நகல்களாகும். அரசு ஆவணங்களை போட்டோ எடுத்து வெளியிட்டதாகவே நான் குற்றம்சாட்டி இருந்தேன். அவற்றைத்தான் அவ்வாறு திருட்டுத்தனமாக அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டேன்.
உச்ச நீதிமன்றத்தில் எனது வாதத்தில் நான் குறிப்பிட்டதை எதிர்க்கட்சிகள் தவறாகப் புரிந்து கொண்டு, பாதுகாப்பு அமைச்சகம் வசம் இருந்த ஆவணங்கள் திருடு போய் விட்டதாகக் கூறி வருகின்றன.
ஆவணங்கள் திருடு போய் விட்டதாகக் கூறப்படுவது முற்றிலும் தவறு! ஆவணங்களைக் கள்ளத்தனமாகப் பிரதி எடுத்திருக்கிறார்கள்” என்றார்.
இந்நிலையில், இந்த ஆவணங்கள் ஏற்கெனவே தி ஹிந்து பத்திரிகையில் வெளியிடப் பட்டதால், அதுவும் இப்போது சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறது.