ரஃபேல் விமானங்கள் குறித்த சர்ச்சைகள் எவ்வளவுக்கு எவ்வளவு ராகுலால் மோசமான நிலையை அடைந்திருக்கிறதோ அவ்வளவுக்கு மோசமான நிலையினை ஆவணத் திருட்டு விவகாரமும் அடைந்திருக்கிறது.
ரஃபேல் ஆவணங்கள் களவாடப் பட்டதாக ஒரு குறிப்பை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் அளித்தார். அதை அடுத்து அதன் மீதான விமர்சனங்கள் அரசியல் ரீதியாக பலமாக எழுந்தன.
ஒரு ஆவணத்தைக் கூடப் பாதுகாக்கத் துப்பில்லாத அரசாங்கம் மக்களைப் பாதுகாக்கப் போகிறதா என்று ஸ்டாலின் கூட கேள்வி எழுப்பும் அளவுக்கு இந்தப் பிரச்னையை சிக்கலாக்கினார்கள். ஆனால், இதற்குக் காரணமாக அமைந்தது ‘தி ஹிந்து’ நாளிதழில் அண்மையில் வெளியான ஒரு கட்டுரைதான்.
ஆனால் அந்தக் கட்டுரை எத்தகைய பொய்களைச் சுமந்துள்ளது என்று கூறி, பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெரும் விளக்கத்தையே கொடுக்க வேண்டிய நிலைக்குப் போனது இந்த விவகாரம். இதன் மூல காரணம், அந்த ஆவணம்.
இந்த ஆவணத் திருட்டு குறித்து கருத்து வெளியிட்ட ‘தி ஹிந்து’ ஆசிரியர் ராம், தாம் தனக்கு இந்த ஆவணங்களைக் கொடுத்தவர்களை காட்டிக் கொடுக்க மாட்டோம் என்றும் பாதுகாப்போம் என்றும் கூறியிருக்கிறார்.
இதனிடையே, இந்த ஆவணத்தை சுஹாசினி ஹைதர் நகலெடுத்து தி ஹிந்துவுக்குக் கொடுத்திருக்கலாம் என்று யூகங்களை சிலர் கிளப்பி விட்டனர். ஆனால், அவர் இல்லை… இதன் பின்னணியில் தானே உள்ளது போன்ற பிரமையை, ப.சிதம்பரம் சொல்லாமல் சொல்லி சில கருத்துகளை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார். இதனால் பாதுகாப்பு அமைச்சகத்தில் ப.சிதம்பரத்துக்கு உள்ள செல்வாக்கு குறித்தும், அவரது கையாள்கள் யார் என்றும், இந்த ஆவணங்களை நகலெடுத்துக் கொடுக்க உதவிய கறுப்பு ஆடு யார் என்றும், கேள்விகள் எழுந்துள்ளன.
ப.சிதம்பரம் தெரிவித்த கருத்துகளில், ரஃபேல் விவகாரத்தில் கடந்த புதன்கிழமை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்த மத்திய அரசு பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து ஆவணங்கள் திருடப்பட்டதாகக் கூறியது. ஆனால், வெள்ளிக்கிழமையன்று நகல் எடுக்கப்பட்ட ஆவணங்கள் என்று தெரிவித்துள்ளது.
ஒருவேளை அந்த ஆவணங்களைத் திருடிய திருடன் வியாழக்கிழமை திருப்பிக் கொடுத்துவிட்டானோ?
ரஃபேல் குறித்து செய்தி வெளியிட்ட ஆங்கில நாளேட்டுக்கு ரகசிய ஆவணங்கள் பாதுகாப்புச் சட்டம் குறித்துத் தெரிவிக்கப்பட்டது! வெள்ளிக்கிழமை சமாதானமாகப் போவது குறித்து சைகை அளிக்கப்பட்டுள்ளது. காமன்சென்ஸுக்கு ஒரு சல்யூட்! – என்று தெரிவித்துள்ளார் ப.சிதம்பரம்.
On Wednesday, it was ‘stolen documents’.
On Friday, it was ‘photo copied documents’.
I suppose the thief returned the documents in between on Thursday.
— P. Chidambaram (@PChidambaram_IN) March 9, 2019