பா.ஜ.க தலைவர் அமித் ஷா, அந்தக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அத்வானியின் காந்தி நகர் தொகுதியில் போட்டியிட உள்ளார். இது குறித்த தகவல் நேற்று வெளியானது.
17வது மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக., முதல் கட்ட பட்டியல் நேற்று வெளியானது. இந்தப் பட்டியலில், பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வாராணசி தொகுதியில் போட்டியிடுகிறார்.
அடுத்து, கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா, குஜராத்தின் காந்திநகர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியானது. இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. காந்திநகர் தொகுதி, பாஜக.,வின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி போட்டியிடும் தொகுதி. தற்போதைய தொகுதியின் எம்.பி., அவர்.
இந்நிலையில், காந்தி நகர் தொகுதியில் அமீத் ஷா போட்டியிடுவதால், எல்.கே. அத்வானி கட்சியில் இருந்து ஓரங்கட்டப் பட்டார் என்றும், மூத்த தலைவர்களுக்கு பாஜக.,வில் தரும் மரியாதை இதுதான் என்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களும் ஆதரவாளர்களும் கருத்துகளைத் தெரிவித்து வந்தனர்.
ஆனால், எல்.கே. அத்வானிக்கு தற்போது 91 வயது ஆகிறது. வயதான காலத்தில் கட்சியினர் மதிக்கும் மூத்த தலைவரான அத்வானியை நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட வைத்து, அவருக்கு சிரமத்தைக் கொடுக்க அமித்ஷாவோ, மோடியோ விரும்பவில்லை என்று கூறப் படுகிறது.
எனவே, அத்வானிக்கு மாநிலங்களவை சீட் வழங்க பா.ஜ.க தலைமை முடிவு செய்தது. இதனை அத்வானியிடம் கூற, அவரும் இதற்கு ஓகே. சொல்லிவிட்டார்.
இதை அடுத்தே, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த அமித் ஷா, தனது தொகுதியிலேயே போட்டியிட அவரே வழி சொல்லியிருக்கிறார் என்கின்றனர் பா.ஜ.க வினர்.!
இதே போல், மூத்த தலைவரான முரளி மனோகர் ஜோஷி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரும் தாங்கள் இந்த முறை போட்டியிடப் போவதில்லை என்று கூறியிருக்கின்றனர்.