கரூர் அருகே அரவக்குறிச்சி பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வாக்கு சேகரித்த போது, எதிர்த்து முணகிய அப்பாவிகள் இருவருக்கு தர்ம அடி கொடுத்தனர். பதவியில் இல்லாத போதே இப்படி என்றால், இவர்கள் மட்டும் அதிகாரத்துக்கு வந்துவிட்டால் என்ன நடக்கும் என்று தேசிய உழவர் உழைப்பாளர் கழக நிறுவனத் தலைவரும், கரூர் மக்களவைத் தொகுதி வேட்பாளருமான ஜோதிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட லிங்கமநாயக்கன்பட்டி பகுதியில் கரூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தீவிர வாக்கு சேகரித்தார். அவருக்கு தி.மு.க.வினற் ஆரத்தி எடுத்தனர்.
அப்போது, அப்பாவி ஈழத்தமிழர்களை கொன்று குவித்த காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு ஆரத்தி ஒரு கேடா? என்று முழக்கம் இட்டார் அப்பகுதியைச் சார்ந்த இளைஞர் ஒருவர். அவர் மீதும் அவருடன் இருந்த இன்னொரு நபர் மீதும் கொலை வெறித் தாக்குதல் நடத்தினர் உடன் வந்த தி.மு.கவினர். தொடர்ந்து வன்முறையிலும் இறங்கினர்.
இந்நிலையில், முன்னாள் அமைச்சரும், தி.மு.க மாவட்ட பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி மற்றும் காங்கிரஸ் கட்சியின் பெண் வேட்பாளர் ஜோதிமணி ஆகியோர் முன்னிலையில் நடத்தப் பட்ட இந்தத் தாக்குதல் பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளிடையே கடும் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது!
இந்நிலையில், கரூர் மக்களவைத் தொகுதி தேசிய உழவர் உழைப்பாளர் கட்சியின் வேட்பாளரும், அக்கட்சியின் நிறுவனத் தலைவருமான ஜெ.ஜோதிக்குமார், இதற்கு கண்டனம் தெரிவித்ததோடு, ஆட்சியில் இல்லாத போதே இப்படி என்றால், ஆட்சிக்கு மட்டும் இவர்கள் வந்தால் என்ன நடக்கும்? என்னவெல்லாம் செய்வீர்கள்? அந்த இளைஞர் நடந்ததைத் தான் கூறியுள்ளார்! காங்கிரஸ் ஆட்சியில் தான் அப்பாவி ஈழத்தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.
ஆகையால் ஒன்று அந்த இளைஞருக்கு பதில் சொல்லி இருக்க வேண்டும், இல்லையென்றால் அந்த இடத்தைவிட்டு வெளியேறி இருக்க வேண்டும்
அதை விட்டுவிட்டு அப்பாவி இளைஞர்களை குண்டர்களை விட்டு தாக்குதல் நடத்துவது தான் வாக்கு சேகரிக்கும் முறையா?
கேள்வி கேட்பது ஒருவரின் ஜனநாயக கடமை, அந்த ஜனநாயக கடமையை காலில் போட்டு மிதிப்பது போல் உள்ளது உங்களின் செயல் என்று கடும் கண்டனம் தெரிவித்தார்.