தூத்துக்குடி: கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நரேந்திர மோடியை மீண்டும்
பிரதமராக்கவே மக்கள் விரும்புகின்றனர், அடுத்த 5 ஆண்டுகளும் ஏழைகளை முன்னேற்றுவதற்கான ஆட்சியாகவே இருக்கும் என்று பேசினார் பாஜக., தேசியத் தலைவர் அமித் ஷா!
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் பாஜக., சார்பில் போட்டியிடும் தமிழக தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜனை ஆதரித்துப் பேசினார் தேசியத் தலைவர் அமித் ஷா. அப்போது அவர்,
அபிநந்தன் பிறந்த தமிழக மண்ணில் இருந்து பேசுவதில் பெருமையாக உள்ளது. பாஜக., தமிழகத்திற்கு இரண்டு அமைச்சர்களை வழங்கியுள்ளது. ஒருவர், பொன்.ராதாகிருஷ்ணன்! மற்றவர் நிர்மலா சீதாராமன். அதன் மூலம் தமிழகத்தை பாஜக., பெருமைப் படுத்தியுள்ளது.
கேரளத்தில் இருந்து மக்களவைக்கு பாஜக.,சார்பில் ஒரு எம்.பி. கூட தேர்வாக வில்லை. என்றாலும், கேரளாவைச் சேர்ந்த நான்கு பேர் பாஜக சார்பில் மாநிலங்களவை எம்.பி.,க்களாக உள்ளனர். இதன் மூலம் தென் மாநிலங்களுக்கு மத்திய அரசு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். தென் மாநிலங்களை பாஜக.,கவனிக்காமல் இருந்ததில்லை!
இனி அடுத்து வரும் பாஜக.,வின் ஆட்சியில் 5 ஆண்டுகளும் ஏழைகள் முன்னேற்றத்துக் கானதாகவே இருக்கும். தமிழகத்தில் வலிமையான கூட்டணியை பாஜக., அமைத் துள்ளது. இங்கு 30 இடங்களில் பாஜக., கூட்டணி வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன. அடுத்து வரும் மக்களவைத் தேர்தல் முடிவில் எதிர்க்கட்சிகள் காணாமல் போகும். பாஜக., மாபெரும் வெற்றி பெறும்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மீண்டும் மோடி பிரதமராக வேண்டும் என்றே மக்கள் விரும்புகின்றனர். அந்த வகையில் மோடி தலைமையில் வலிமையான அரசு அமைய பாஜக வேட்பாளருக்கு வாக்களியுங்கள்!
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், தமிழகத்தின் வளர்ச்சி மேன்மேலும் உறுதிப் படுத்தப்படும். தமிழக வளர்ச்சிக்காக அதிக திட்டங்களை மத்திய அரசு கொண்டு வரும்.
காஷ்மீர் மாநிலம், புல்வாமா தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த இருவர் உட்பட 40 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். இதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் சென்று தாக்குதல் நடத்தப்பட்டது.
பயங்கரவாதிகள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்போது, பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள் என திமுகவும், காங்கிரசும் சொல்கின்றன.
வெடிகுண்டு வீசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமா இல்லையா? காஷ்மீரில் ஆயுதப்படை சிறப்புச் சட்டத்தை திரும்பப் பெறுவோம் என்கிறது காங்கிரஸ். அங்கே
முப்படைகள் மற்றும் ராணுவத்தின் பெருமையை சீர்குலைக்க காங்கிரஸ் விரும்புகிறதா?
காஷ்மீர் விவகாரத்தில் சமரசத்திற்கு இடமில்லை. காஷ்மீர் இந்தியாவின் ஓர் அங்கம். அதனை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நிதிக்குழு மூலம் 94 ஆயிரம் கோடி மட்டுமே தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் பாஜக., ஆட்சியில் 14வது நிதிக் குழு மூலம் தமிழகத்துக்கு ஏறத்தாழ ரூ.5.42 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இப்போது நம்முடன் இருக்கும் தமிழக முதல்வர் தேஜகூடணி முதல்வர்! எனவே நாங்கள் கொடுத்த தொகையை விட நிச்சயம் மேலும் அதிகம் கொடுப்போம் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
ரூ.40 லட்சம் ஜிஎஸ்டி விலக்கு அளித்திருக்கிறோம் ரூ. 5லட்சம் வரையில் வருமான வரி விலக்கு அளிக்கப் பட்டிருக்கிறது. ரூ.60 லட்சம் வரை வரக் கூடிய வியாபாரிகளுக்கு வருமான வரி விலக்கு அளித்திருக்கிறோம் மீனவர்கள் நலனைப் பாதுகாக்க ஒரு துறையை மோடி அரசு உருவாக்கியிருக்கிறது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு ரூ.12 ஆயிரம் கோடி ஒதுக்கீடு தேசிய நெடுஞ்சாலை ரூ. 23ஆயிரம் கோடி ரயில்வே நிர்வாகத்துக்காக ரூ. 20 ஆயிரம் கோடி பிரதான் மந்திரி வீடு கட்டும் திட்டத்துக்காக ரூ.3,600 கோடி ரூபாய் அம்ருத் திட்டம், பாரத் மாலா திட்டம், சாகர் மாலா திட்டம் ஒரு லட்சத்து பத்தாயிரம் கோடி, இவற்றுக்கு இணையம் துறைமுகம் திட்டத்துக்காக 28 ஆயிரம் கோடி ரூபாய் என்று மோடி அரசு ஒதுக்கீடு செய்து, தமிழகத்துக்கு பல திட்டங்களை செய்து வருகிறது.
ஐமுகூ., அரசு ரூ.12 லட்சம் கோடி கொள்ளையடித்துள்ளது. கனிமொழி, கார்த்தி சிதம்பரம் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள். அவர்கள் மீது வழக்குகள் உள்ளன. சிதம்பரம், ராஜா, கனிமொழி போல் பாஜக.,வில் ஊழல்வாதிகள் இல்லை. தேஜ.,கூட்டணியில் மீண்டும் அரசுக்கு வந்ததும் தமிழகம் மிகப் பெரும் உத்வேகம் பெறும். எனவே தமிழகத்தில் தேஜகூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என்று பேசினார் அமீத் ஷா.
LIVE : Shri @AmitShah addresses public meeting in Thoothukudi, Tamil Nadu. https://t.co/tkhjKD5Yli
— BJP (@BJP4India) April 2, 2019