சென்னை : பணப்பட்டுவாடா புகார் காரணமாக, வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து அதிமுக சார்பில் தாக்கல் செய்யப் பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
வேலூர், காட்பாடி உள்ளிட்ட பகுதிகளில் திமுக., வேட்பாளராகப் போட்டியிடும் கதிர் ஆனந்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு வருமான வரித் துறை அறிக்கை அனுப்பியதை அடுத்து, தேர்தல் ஆணையம் குடியரசுத் தலைவர் ஒப்புதலின் பேரில், வேலூர் தொகுதி தேர்தலை ரத்து செய்தது.
இந்நிலையில், குறிப்பிட்ட வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று அதிமுக., கூட்டணி தரப்பில் கோரப் பட்டது. அதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதேநேரம், அதிமுக., கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சியின் ஏ.சி.சண்முகம், சுயேச்சை வேட்பாளர் சுகுமாரன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் விசாரித்தது. அவர்கள் தொடர்ந்து தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று காலை அவசரமாக விசாரித்தது. அப்போது, மாலை 4.30க்குப் பின்னர் இது குறித்த தங்கள் முடிவை அறிவிப்பதாக நீதிபதிகள் கூறினர்.
ஏ.சி.சண்முகம், சுயேச்சை வேட்பாளர், தேர்தல் ஆணையம் என அனைத்துத் தரப்பினரின் வாதங்கள் முடிவடைந்த நிலையில், தேர்தல் ஆணையம், குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் தேர்தலை ரத்து செய்ததற்கு எதிராக தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தனர்.
மேலும், வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தலை ரத்து செய்தது சரிதான் என்றும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் அவர்கள் கூறினர்.