நிதி நெருக்கடி காரணமாக தற்காலிகமாக மூடப் பட்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் வேலை இழந்த 500 ஊழியர்களுக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் பணி வழங்கியுள்ளது.
கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்தது ஜெட் ஏர்வேஸ் நிறுவனம்! குத்தகைக்கு விமானங்களைக் கொடுத்த நிறுவனங்களுக்கு அதிக அளவு பாக்கி வைத்திருந்தது. ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க இயலாத நிலை. இதை அடுத்து, தற்போது தனது சேவையை முற்றிலும் நிறுத்திக்கொண்டுள்ளது ஜெட் ஏர்வேஸ்.
இதனால் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை இழந்தனர். வேலை இழப்பால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மீண்டும் செயல்பட உதவும்படி மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தைச் சேர்ந்த 100 விமானிகள் உட்பட 500 ஊழியர்களுக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் பணி வழங்கியுள்ளது. இந்த தகவலை அந்நிறுவனத்தின் தலைவர் அஜய் சிங் தெரிவித்துள்ளார்.