புது தில்லி: கேரளாவில் தென்மேற்கு பருவமழை சற்று தாமதமாகத் தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வருடம் ஜூன் 6 ஆம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக ஜூன் 1 ஆம் தேதி தொடங்கவேண்டும், ஆனால் இம்முறை 5 நாட்கள் காலதாமதமாக தொடங்கும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
தென்மேற்குப் பருவமழை வழக்கமாக ஜூன் 1 ஆம் தேதி தொடங்கி, 4 மாதங்களுக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு மழைப் பொழிவை அளிக்கும்.
தென்மேற்குப் பருவமழை தெற்கு அந்தமான் கடற்பகுதி, நிகோபார் தீவுகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் இந்த மாதம் 18 அல்லது 19 ஆம் தேதி தொடங்க சாதகமான சூழல் உருவாகி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், தனியார் வானிலை ஆய்வு நிறுவனமான ஸ்கைமெட் இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை கேரளாவில் ஜூன் 4 ஆம் தேதி தொடங்கும்! இதில் ஓரிரு நாட்கள் மாறுதல் ஏற்படலாம் என்று கூறியுள்ளது.
கடந்த வருடம் தென்மேற்குப் பருவமழை முன்னதாகவே தொடங்கி, கேரளத்தில் பெருமழையைப் பெய்வித்தது. இதனால் கேரளத்தில் பெரும்பாலான அணைகள் நிரம்பியிருந்தன. இந்நிலையில் அதன் பின்னர் திடீரெனப் பெய்த மழையில் அணைகள் அனைத்தும் நிரம்பி வெள்ளம் பெருக்கெடுத்து கேரளம் பேரழிவைச் சந்தித்தது.