கோடை வறட்சியின் காரணமாக நீர் வரத்து இன்றி வறண்டு காணப்படுகின்றன நெல்லை மாவட்டம் குற்றால அருவிகள். இதனால் இவை சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றமடைய வைத்துள்ளன.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே மழை பெய்யாததால் கடுமையான வறட்சி நீடித்து வருகிறது. இதன் காரணமாக குற்றால அருவிகளில் நீர் வரத்து இன்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது. இதனால் குற்றால அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
பழைய குற்றாலம் அருவி போக்குவரத்தோ, கடைகளோ, ஆள் நடமாட்டமோ இன்றி காணப்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக அங்குள்ள குரங்கு உள்ளிட்ட உயிரினங்கள், குடிக்கவும் தண்ணீர் இன்றி பாறை இடுக்குகளில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரை அருந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
அங்கு ஓடும் சொற்ப நீரில் அப்பகுதி மக்கள் மீன்பிடித்து வருகின்றனர். இன்னும் சீஸன் காலம் தொடங்கவில்லை. வழக்கம் போல் மே மாத இறுதி நாளில் சீஸன் தொடங்கிவிடும். ஆனால் இம்முறை ஒருவாரம் தாமதமாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஜூம் மாத முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் சீஸன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.