தமிழக அரசு சார்பில் சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அனைத்து துறை அரசு அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
தமிழக முதல்வரின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தை தமிழகத்தின் முதன்மை மாவட்டமாக மாற்றும் முயற்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஈடுப்பட்டுள்ளார்.
இதற்காக சேலம் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். இந்நிலையில் தமிழக அரசு சார்பில் சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அனைத்து துறை அரசு அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
சேலம் அஸ்தம்பட்டி ஆய்வு மாளிகையில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி, மாநகராட்சி ஆணையர் சதீஷ், மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், மாநகர காவல் ஆணையர் சங்கர் உட்பட அனைத்து துறை அரசு அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் சேலம் மாவட்டத்தில் நிலவிவரும் தண்ணீர் பற்றாக்குறைக்கு விரைந்து நடவடிக்கை எடுத்து அனைத்து பொதுமக்களுக்கும் தண்ணீர் வழங்க வேண்டும், பொதுமக்களின் அடிப்படை தேவைகளான சாலை, சாக்கடை வசதிகளை மேம்படுத்தும் பணிகளை விரைந்து முடிக்கவும், தற்போது மழை காலம் தொடங்க உள்ளதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், தேவையான மருந்துகளை இருப்பு வைத்து கொள்ளவும், தமிழக அரசின் அனைத்துத்துறைகள் சார்பில் சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் அனைத்தையும் உரிய காலத்தில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து துறை அதிகாரிகளுக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தினார்.