பெங்களூரில் பரபரப்பான ராமநகரம் பகுதியில் வெடிக்காத நிலையில் இரு குண்டுகள் முன்னதாகவே கண்டறியப் பட்டு, செயலிழக்கச் செய்யப் பட்டன.
பெங்களூரு அருகே கைதான வங்கதேசத்தைச் சேர்ந்த பயங்கரவாதி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ராமநகரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு வெடி குண்டுகள் கண்டெடுக்கப் பட்டன. இது பரபரப்பை ஏற்படுத்தியது!
பீகார் மாநிலம் புத்தகயாவில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தேடப்பட்டு வந்த ஜமாத் உல் முஜாகிதீன் பங்களாதேஷ் என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஹபிபுர் ரஹ்மான் (28 வயது) பெங்களூரில் தேசிய புலனாய்வு முகமை அமைப்பினரால் நேற்று முன்தினம் கைது செய்யப் பட்டான்.
பின்னர் பெங்களூரில் உள்ள தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப் பட்டான். கூடுதல் விசாரணைக்குப் பின்னர் ஐந்து நாட்கள் காவலில் எடுத்து பயங்கரவாதி ஹபிபுர் ரஹ்மானை என்.ஐ.ஏ., அமைப்பினர் மேலும் விசாரித்து வந்தனர்!
அந்த விசாரணையின் போது பெங்களூர் அருகே உள்ள ராமநகரத்தில் வெடிகுண்டுகளை மறைத்து வைத்திருப்பதாக அவன் தெரிவித்தான். இதைக் கேட்டு அதிர்ச்சியுற்ற விசாரணை அதிகாரிகள், உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர் !
அதன் பேரில் பயங்கரவாதி ஹபிபுர் ரஹ்மானையும் நேற்று காலை ராமநகரம் அழைத்துச் சென்றனர். அங்கே உளவுத் துறை தீயணைப்புத் துறையினர் தயார் நிலையில் இருந்தனர்.
பயங்கரவாதி சுட்டிக்காட்டிய மேம்பாலத்தின் கீழே இரண்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை செயலிழக்க வைக்கப்பட்டன. இதன் மூலம் பயங்கரவாத சதித் திட்டம் முறியடிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.