
மனைவிக்கு உருக்கமாக வீடியோ பதிவு செய்துவிட்டு இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
குழந்தை இல்லாத மன வருத்தத்தில் மனைவிக்கு உருக்கமாக வீடியோ ஒன்றை பதிவு செய்து கணவர் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அம்பத்தூரை அடுத்த பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜ். 33 வயதான இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி மோகனப்பிரியா (வயது 31). இவர்களுக்கு ஐந்து வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை.
அண்மையில் கர்ப்பமான மோகனாவுக்கு பிப்ரவரியில் கரு கலைப்பு ஏற்பட்டுள்ளது! இதனால் மனவேதனையில் இருந்தனர் இத் தம்பதியர்.
மோகனப்பிரியா நேற்று காலை அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ராஜ், நேற்று முன்தினம் இரவு பணிக்கு சென்றுவிட்டு நேற்று காலை வீட்டில் ஓய்வு எடுத்துள்ளார். பிறகு மதியம் ஒரு மணி அளவில் மோகனப்பிரியா வீடு திரும்பியபோது கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது!
இந்தச் சம்பவம் குறித்து திருமுல்லைவாயல் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, ராஜ் தனது மனைவிக்கு உருக்கமாக பேசிய வீடியோ ஒன்று கிடைத்தது. அதில், ராஜ் அவரது மனைவி மோகனாவுக்கு, உனக்கு நல்ல வாழ்க்கை கிடைக்க வேண்டும். தயவு செய்து என்னை மாதிரி தற்கொலைக்கு முயற்சிக்காதே. நீ இன்னொரு கல்யாணம் செய்துகொள். குழந்தை குட்டியோடு சந்தோஷமாக இரு… என்று உருக்கமாகப் பேசி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது!

