ஆந்திர பிரதேசத்திற்கு புது ஆளுநரை மத்திய அரசாங்கம் நியமித்துள்ளது. ஆந்திர ஆளுநராக பிஸ்வ பூஷன் ஹரிச்சந்தன் நியமிக்கப் பட்டுள்ளார்.
அவரது நியமனம் குறித்து குடியரசுத் தலைவர் அலுவலகம் செவ்வாய்க் கிழமை இன்று உத்தரவு பிறப்பித்தது! பிஸ்வ பூஷன் ஒடிசாவைச் சேர்ந்த பாஜக., மூத்த தலைவர்.
ஆபரேஷன் கமலம் தொடங்கி விட்டதா? ஆந்திராவுக்கு புது ஆளுநர் வந்துவிட்டாரே என்று ஆந்திரத்தில் பல்வேறு யூகங்கள் உலாவரத் தொடங்கியுள்ளன.
சத்தீஸ்கருக்கு கூட அனுசுயா ஊகி என்ற ஆளுநரை நியமித்து குடியரசுத் தலைவர் மாளிகை உத்தரவிட்டுள்ளது. ஹரிச்சந்தன் ஒடிசா பிஜேபி.,யின் மூத்த தலைவர். 1971இல் பாரதீய ஜனசங்கத்தில் சேர்ந்த இவர் பின்னர் பிஜேபியில் இணைந்தார்.
பின் புவனேஸ்வரிலிருந்து எம்பி.,யாக வென்று 1980 முதல் 1988 வரை பி.ஜே.பி., மாநிலத் தலைவராக பணியாற்றினார். சிலிகாவில் இருந்து ஐந்து முறை எம்எல் ஏ வாக வென்று அமைச்சராகப் பணிபுரிந்தார். எழுத்தாளராக பல நூல்களை எழுதியுள்ளார்.
ஹரிசந்தனை ஆந்திர ஆளுநராக நியமித்ததால், இரு தெலுங்கு மாநிலங்களின் இணை ஆளுநராக இருந்த நரசிம்மன் தற்போது தெலங்காணாவிற்கு மட்டுமே ஆளுநராகப் பணிபுரிவார்.
தெலுங்கு மாநிலங்கள் இரண்டாகப் பிரிவதற்கு முன்பிருந்தே 2009 முதல் ஆளுநராக பணிபுரிந்த நரசிம்மன் தெலங்காணா மாநிலப் பிரிவினைக்கு பின்னும் இரு மாநில ஆளுநராக தொடர்ந்தார்.
2019 தேர்தலுக்கு முன்பே ஆளுநர் மாற்றப்படுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் மாற்றவில்லை. தற்போது பிஜேபி., மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்தவுடன் மாற்றம் நிகழ்ந்துள்ளது!