தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் பாஞ்சாலி வயது 23 , தர்மபுரி மாவட்டம் கல்லாத்துப்பட்டியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவருக்கும் பெற்றோர்கள் நிச்சியத்து, மணமகன் வீட்டாருக்கு வரதட்சணைக் கொடுத்து, 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
10 மாதங்கள் நன்றாக சென்ற நிலையில் நாட்கள் ஆக ஆக கணவன் மனைவி இருவருக்கும் இடையில் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தகராறு ஏற்படும் போதெல்லாம் பாஞ்சாலி தன் தாய் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். தாய் வீட்டிற்கு சென்றவுடன் அவரது தாய் சமாதானம் செய்து திரும்பவும் சதீஷ்குமாரின் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட குடும்ப தகராறில் ஆத்திரமடைந்த பாஞ்சாலி திரும்பவும் தன் தாய் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது சதீஷ்குமார் தன்னை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக தன் தாயிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார். இந்நிலையில் அவரை சமாதானப்படுத்திய அவரது தாய்,பாஞ்சாலியை மீண்டும் சதீஷ்குமாரின் வீட்டிற்குக் கொண்டுவந்து விட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று கணவன் மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த பாஞ்சாலி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.பாஞ்சாலி 8 மாத கர்ப்பிணி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அக்கம்பக்கத்தினர் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவரது தாய் சகுந்தலாவிற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த சகுந்தலா தன் மகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை அவர்கள்தான் கொலை செய்துவிட்டார்கள் என கூறி பாஞ்சாலியின் உடலை கட்டிப்பிடித்து அழுதுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாப்பிரெட்டிப்பட்டி காவல்துறையினர் பாஞ்சாலியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதையடுத்து தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக சகுந்தலா காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்