நீலகிரியில் உள்ள முதுமலையில் மொத்தம் 60 புலிகள்தான் இப்போதைக்கு உள்ளன. சில சமயம் உணவு தேடி கிராமப்பகுதிகளுக்கு வந்துவிடும் நிலையும் உள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் புலி ஒன்று வனப்பகுதியின் எல்லையில், வாயில் ரத்தம் கசிந்த நிலையில் இறந்து கிடப்பதை வன ஊழியர்கள் கண்டனர்.இது குறித்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள், புலி எப்படி இறந்து போனது என்பது குறித்து விசாரணை ஆரம்பித்தனர். அந்த புலிக்கு கிட்டத்தட்ட 15 வயது இருக்கும் எனக் கூறப் படுகிறது. சாம்பார் சாதம் சாப்பிட்டதால்தான் புலி இறந்துவிட்டதாகவும், ஊருக்குள் புலி வருவதை தடுக்க விஷம் வைத்திருப்பார்கள் என்றெல்லாம் வதந்திகள் பரவின.
போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டால்தான் புலி எப்படி இறந்தது என்று உறுதி செய்ய முடியும் என்று கூறப்பட்டது. அதன் அடிப்படையில் நேற்று கால்நடை மருத்துவர்களை அழைத்து உடற்கூறு ஆய்வு மேற்கொண்டனர். சில அதிர்ச்சிகரமான உண்மைகள் தெரிய வந்திருக்கிறது. புலி பசித்தாலும் புல்லை உண்காது என சொல் வழக்கு உண்டு. ஆனால் பசியில் இருந்த புலி, சாப்பிட எதுவும் கிடைக்காததால், குப்பைகளை உண்டதாகத் தெரிகிறது. அந்த குப்பையில், துண்டு பிளேடு இருந்திருக்கிறது.
அது என்னவென்றே அறியாமல் புலி உண்டிருக்கிறது. வயிற்றுக்குள் சென்ற பிளேடுனால் வாந்தி எடுத்து சம்பவ இடத்திலேயே இறந்திருக்கிறது. ஒரு செ.மீ அளவுள்ள கூர்மையான பிளேடு வயிற்றுக்குள் இருந்தது வெளியே எடுக்கப்பட்டது. புலியின் உயிரை இந்த துண்டு பிளேடு பறித்து விட்டது.


