காஷ்மீரைப் பிரிக்கும் அரசின் நடவடிக்கை ஏராளமான நன்மைகளைத் தருவது என காங்கிரஸ் மூத்த தலைவரும் மகாராஜா ஹரிசிங்கின் மகனுமான கரண் சிங் தெரிவித்துள்ளார்.
1947 ஆம் ஆண்டு காஷ்மீர் குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர் கரண் சிங்கின் தந்தை மகாராஜா ஹரி சிங். இவர் தான் காஷ்மீரை ஆண்ட கடைசி மன்னர். ஹரி சிங்கின் மகனும், பின்னாளில் காஷ்மீர் மாநிலமாக மாற்றப்பட்ட காஷ்மீரின் முதல் ஆளுநருமான கரண் சிங். காங்கிரஸ் கட்சியில் உள்ளார். இவர் தற்போது காஷ்மீர் பிரிக்கப்பட்ட முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவரும் மகாராஜா ஹரி சிங்கின் மகனுமான டாக்டர் கரண் சிங் வெளியிட்ட அறிக்கை:
மத்திய அரசின் முடிவை கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்கக் கூடாது. அரசின் இந்த நடவடிக்கையால் எதிர்பாராத பல மாற்றங்களும், வளர்ச்சிகளும் விரைவாக நடக்கும்.
ஏராளமான நல்ல விஷயங்கள் நடக்கும். யூனியன் பிரதேசம் ஆக்கப்பட்டதால் நெருக்கடி நிலையில் இருந்து லடாக் மீளவுள்ளது வரவேற்கத் தக்கது. ஜம்மு மற்றும் காஷ்மீர் இடையே அரசியல் அதிகாரம் நியாயமான முறையில் பிரிக்கப்படும்.
விரைவிலேயே காஷ்மீர் மீண்டும் முழு மாநில அந்தஸ்தை பெறும். அதுவரை நாட்டின் பிற மாநிலங்களில் இருக்கும் மக்களை போல் காஷ்மீர் மக்களும் அரசியல் உரிமைகளைப் பெறட்டும்.
பலர் இதனை மனிதாபிமானமற்றது என கருதுகிறார்கள். ஆனால் அரசியல் ரீதியிலான பேச்சுவார்த்தை நடத்த இது தொடர்வது முக்கியம். மாநிலத்தின் இரண்டு முக்கிய கட்சிகளும் இதனை எதிர்ப்பது சரியல்ல!
காஷ்மீர் மக்கள் அனைத்து வகையிலும் நன்மைகளையும் பெற வேண்டும் என்பதே எனது ஆழ்மனதின் ஒரே கவலை என்று எனது தந்தை எழுதிய வரிகளை நினைத்துப் பார்க்கிறேன். – என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 1965 ஆம் ஆண்டில் லடாக்கை ஒரு யூனியன் பிரதேசமாக அங்கீகரிக்க பரிந்துரைத்தேன். பாரபட்சமான 35 ஏ பிரிவுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றும், புதிய வரம்பு நீக்கம் ஜம்மு-காஷ்மீர் பகுதிகளுக்கு இடையில் அரசியல் அதிகாரத்தை நியாயமான முறையில் பிரிப்பதை உறுதி செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காஷ்மீர் தொடர்பாக, அரசியல் உரையாடல் தொடர வேண்டும் என்றும், இரண்டு முக்கிய மாநிலக் கட்சிகள் இதனை ‘தேச விரோதம்’ என்று நிராகரிப்பது நியாயமற்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் உரையாடலை நடத்துமாறு அரசியல்வாதிகளை வலியுறுத்திய அவர், இன நல்லிணக்கத்தை பேண வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அவர் தனது ஒரே அக்கறை மாநிலத்தின் அனைத்து பிரிவுகள் மற்றும் பிராந்தியங்களின் நலனை மேலும் மேம்படுத்துவதாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
370 வது பிரிவை ரத்து செய்வதற்கு ஆதரவாக ஜோதிராதித்யா சிந்தியா, தீபீந்தர் ஹூடா, ஜனார்தன் திவேதி ஆகியோரின் வரிசையில் காங்கிரஸ் தலைவரான கரண் சிங்கும் இணைந்துள்ளார்.