ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை அன்று, மிக முக்கியமான ஒரு கருத்தை வெளியிட்டது சென்னை உயர் நீதிமன்றம். அதுவும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்கானதுதான்! பெண் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இந்தக் கேள்வியை, அச்ச உணர்வு மேலோங்க வெளிப்படுத்தியுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
‘இரு பாலரும் பயிலும் கிறிஸ்துவ கல்வி நிறுவனங்களில், பெண் குழந்தைகளின் எதிர்காலம் பாதுகாப்பு இன்றியே உள்ளதாக பெற்றோர் மத்தியில் அச்ச உணர்வு உள்ளது’ என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்திருப்பதை சமூக ஆர்வலர்கள் பலரும் ஆமோதிக்கின்றனர். சிலர், பூனைக்குட்டி இப்போது வெளியே வந்துவிட்டது என்ற ரீதியில் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்தக் கருத்தோட்டத்தின் பின்னணியில் உள்ளது சென்னை தாம்பரத்தில் உள்ள கிறிஸ்துவக் கல்லூரி!
தாம்பரம் கிறிஸ்துவக் கல்லுாரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் சாமுவேல் டென்னிசன் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், மாணவ மாணவிகள் 42 பேர் பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட நகரங்களுக்கு, 2019 ஜனவரியில் கல்வி சுற்றுலா சென்றனர். அவர்களுடன் நான் உள்ளிட்ட ஏழு ஆசிரியர்களும் சுற்றுலாவுக்குச் சென்றோம். பின்னர் மாணவியர் அளித்த புகார்கள் குறித்து, ‘பணிபுரியும் இடத்தில் பாலியல் தொந்தரவுகள்’ குறித்த புகார்களை விசாரிக்கும் குழு என்னிடம் விளக்கம் கேட்டது.
நான் விரிவாக பதில் அளித்திருந்தேன்! ஆனால் நான் அளித்த விளக்கத்தில் திருப்தி இல்லாமல் விசாரணை நடத்தப்பட்டது.
அந்தக் குழு முன்னர் ஏழு மாணவியர் ஆஜர் ஆனார்கள். ஆசிரியர்கள் மாணவியர், அந்தக் குழுவிடம் அளித்த வாக்குமூலத்தின் நகல்களை கேட்டேன். விசாரணை முடிந்த பின் தான் அவை வழங்கப்பட்டன. குழு பின்பற்றிய நடைமுறை, இயற்கை நீதியை மீறுவதாக இருந்தது.
விசாரணைக் குழுவின் அறிக்கையில் நான் பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை ரத்து செய்ய வேண்டும். என்னிடம் விளக்கம் கேட்டு, இரண்டாவதாக அனுப்பிய நோட்டீசையும் ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த, நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவில்…
மற்றொரு பேராசிரியரின் பாலியல் தொந்தரவு செயலுக்கு உதவியாக இருந்ததாக, மனுதாரருக்கு எதிராக குற்றச்சாட்டு உள்ளது. மனுதாரரின் நடத்தை பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகளை தடுக்கும் சட்டத்தின் கீழ் வருமா இல்லையா என்பதை தற்போதைய கட்டத்தில் ஆராய முடியாது.
விசாரணை நடத்தப்பட்டதில் இயற்கை நீதி எதையும் குழு மீறவில்லை. குழுவின் அறிக்கையில் குறைபாடும் இல்லை. குழு அறிக்கை மற்றும் இரண்டாவதாக அனுப்பப்பட்ட ‘நோட்டீஸ்’ விஷயத்தில் குறுக்கிட எந்த முகாந்திரமும் இல்லை. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
கிறிஸ்துவ மிஷனரிகள் ஏதாவது ஒரு வழியில் தாக்குதலுக்கு உள்ளாகின்றன.
கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவதாக இவர்களுக்கு எதிராக குற்றச் சாட்டுக்கள் முன் வைக்கப்படுகின்றன.
இரு பாலரும் படிக்கும், கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் குறிப்பாக பெண் குழந்தைகளின் எதிர்காலம் பாதுகாப்பாற்றதாக இருப்பதாக பெற்றோர் மத்தியில் பொதுவான உணர்வு உள்ளது.
கிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள் நல்ல கல்வியை வழங்கினாலும் அறநெறியை போதிப்பது என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
பெண்கள் நலன்களைப் பாதுகாப்பதற்கு பல்வேறு சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன. இந்த சட்டங்களை எல்லாம் நியாயமான காரணங்களுக்கு பயன்படுத்துகின்றனரா என்ற கேள்வியை நமக்குள் கேட்க வேண்டும்.
சில சட்டங்களை அணுக பெண்களுக்கு எளிதாக உள்ளது. ஆண்களுக்கு பாடம் கற்பிக்கும் விதத்தில் பொய்யான வழக்குகளை தொடுத்து, சட்டத்தை துஷ்பிரயோகம் செய்வதும் உள்ளது.
வரதட்சணை ஒழிப்பு சட்டம், துஷ்பிரயோகம் செய்யப்பட்டது குறித்து உச்ச நீதிமன்றமே கருத்து தெரிவித்துள்ளது. எனவே அப்பாவிகளின் நலன்களை பாதுகாக்கும் விதமாக சட்டத்தை துஷ்பிரயோகம் செய்வதை தடுக்க தகுந்த சட்ட திருத்தங்களை ஏற்படுத்த அரசு சிந்திக்க வேண்டிய தருணம் இது என்றார்.
அண்மைக் காலங்களில் கிறிஸ்துவ மிஷனரிகளின் செயல்பாடுகள் அதிகம் சமூகத் தளங்களில் வெளித் தெரிந்து வருகின்றன. ஊடகங்களில் பணியில் உள்ளவர்கள், கல்வி தொடர்பில் அடிப்படை முதலே இதே கிறிஸ்துவ மிஷனரிகளின் கட்டுப்பாட்டில் பயின்றதால், கிறிஸ்துவ மிஷனரிகளின் மனசாட்சிகளாகவே செயல்படுகின்றனர். அதற்கு அடிப்படையாக அமைந்தது, இதே உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்த கருத்தோட்டத்தின் படி, அறநெறியை பயின்றார்களா என்பது மில்லியன் டாலர் கேள்விதான் என்பது!
கிறிஸ்துவ மிஷனரிகளிலும், மிஷனரிகள் நடத்தும் கல்விக் கூடங்கள், மருத்துவமனைகள், தொண்டு இல்லங்கள் உள்ளிட்டவற்றிலும் நடைபெறும் பிரச்னைகள், முறைகேடுகள் வெளி உலகுக்குத் தெரியாமலும் அதிகம் விவாதிக்கப் படாமலும் போவதற்குக் காரணம், இவர்களிடம் கல்வி கற்றவர்கள் ஊடகங்களிலும், அரசுத் துறைகளிலும், காவல் பணிகளிலும் அதிகம் நிரம்பி விடுவதுதான்!
இந்நிலையில் சமூக ஊடகங்களே இவற்றை அதிகம் வெளிக் கொண்டு வருகின்றன. கேரளத்தில் ஆர்ச் பிஷப் பிராங்கோ முல்லேகால் விவகாரம் ஏன் நீர்த்துப் போனது என்பதற்கும், இந்த விவகாரங்கள் ஏன் விவாதிக்கப் படாமல் போனது என்பதற்கும், கன்னியாஸ்திரிகளின் கண்ணீர் ஏன் கடலில் கரைத்த பெருங்காயம் ஆனது என்பதற்குமான விடை சென்னை உயர் நீதிமன்றத்தின் கருத்தோட்டத்தில் தெரியவந்துள்ளது.
இந்த நூற்றாண்டு மட்டுமல்ல, 19ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், தமிழகத்தில் மிஷனரிகளின் பள்ளிகளில் தங்கள் பகுதி பெண் குழந்தைகளை படிக்க அனுப்பக் கூடாது என்று இந்துக்களிடம் பெரும் போராட்டமே நடைபெற்றது. கிறிஸ்துவப் பள்ளிகளில் பயிலச் செல்லும் பெண் குழந்தைகளின் அவல நிலையை எண்ணி, அதற்கு எதிராக பெரும் போராட்டங்களே நடந்துள்ளன.
இன்றும் அத்தகைய நெருக்கடிகள் தொடரத்தான் செய்கின்றன. ஆனாலும், கிறிஸ்துவப் பள்ளிகளில் பெண்குழந்தைகளைச் சேர்த்துவிட்டு, அதன் பின்னர் தங்கள் பாரம்பரிய வாழ்வு முறையை, அதன் மகிழ்ச்சியைத் தொலைத்த பெற்றோர்களே மிக அதிகம்!