பத்தாண்டுகள் உருண்டோடி விட்டன. மே 18, 2009 – அவ்வளவு சுலபமாக மறக்க முடியுமா?
தமிழ் ஈழ இனப் படுகொலையில் ஒன்றரை லட்சம் ஈழத்தமிழர்கள் கொத்துக் கொத்தாக படுகொலை செய்யப்பட்ட நாள். தமிழக கடலோரத்திலிருந்து கூப்பிடு தூரத்தில் நமது தொப்புள் கொடி உறவுகள் அழிக்கப்பட்ட போது எதையும் செய்ய முடியாமல் கையாலாகாதவர்களாக இருந்தோம்.
2009 ஜனவரி 24 அன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசும் போது ஈழத்தமிழர்கள் மீது சிங்கள ராணுவம் நிகழ்த்திய தாக்குதல்களை கண்டித்து உணர்ச்சியோடு உரையாற்றினேன். அன்று இரவு வைகோ அவர்கள் என்னை தொடர்பு கொண்டு மனமாரப் பாராட்டினார்.
அதைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் பா. நடேசன் தொடர்பு கொண்டார். ” வணக்கம் மைத்ரேயன் ! வன்னியிலிருந்து நான் நடேசன் பேசுகிறேன். தலைவர் பிரபாகரன் சார்பில் எங்கள் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் “. அந்த பாசமான குரல் இன்றும் என் செவிகளில் ஒலிக்கிறது.
2009 மார்ச் 11 அன்று மூன்றாவது அணியின் சார்பில் கர்நாடகா தும்குரில் திரு தேவகவுடா ஏற்பாட்டில் நடைபெற்ற மாநாட்டில் கழகத்தின் சார்பாக அம்மா அவர்களின் பிரதிநிதியாக நான் கலந்து கொண்டேன்.
அதே நாளில் சென்னையில் அம்மா அவர்கள் ஈழத்தமிழர் பிரச்சினைக்காக உண்ணாவிரதம் இருந்தார். மதியம் 1மணி அளவில் நடேசன் என்னை தொடர்பு கொண்டு அம்மா அவர்களின் உண்ணாவிரத போராட்டத்திற்கு பிரபாகரன் தனது நன்றியை தெரிவித்ததாக கூறினார்.
2009 ஏப்ரல் 26 அன்று இரவு சேலத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அம்மா அவர்கள் தேர்தலுக்குப் பின் அமையவுள்ள ஆட்சியில் கழகம் பங்கேற்றால் இந்திய ராணுவத்தை அனுப்பி தமிழ் ஈழம் அமைப்பேன் என்று முழக்கமிட்டார். ஜெயா பிளஸ் தொலைக்காட்சி நேரலையில் அதைப்பார்த்து பிரபாகரன் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார். அருகில் இருந்த நடேசன் என்னை தொடர்பு கொண்டு அதை பகிர்ந்து கொண்டார்.
அதை நானும் கார்டனில் தெரிவித்து விட்டேன். இவை அனைத்தும் எனது வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவுகள்.
அன்பு நண்பர் நடேசன் ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் ஒப்பந்தப்படி சரணடைந்த போது ஈவிரக்கம் இன்றி போர் விதிமுறைகளுக்கு மாறாக சுட்டுக் கொல்லப்பட்டார்.
2009 மே மாதம் 14 – 18 நாட்கள்….மறக்க முடியாத நாட்கள்.
நினைக்கிறேன் வலிக்கிறது. நெஞ்சமெல்லாம் கொதிக்கிறது.
– வா. மைத்ரேயன் எம்.பி., (அதிமுக., மாநிலங்களவை உறுப்பினர்)