தமிழகத்தை Natural hindutuva state என்று சொல்லும் போதெல்லாம் என்றுமே அதை நான் நம்பியதில்லை .இப்போது கூட அத்திவரதர், ஆனி திருமஞ்சனம் என மக்கள் லட்சக்கணக்கில் திரளுகிறார்கள். ஆனால் ஹிந்து விரோத பேச்சுகளுக்கு வாக்களிக்கிறார்கள் என்ற வருத்தத்தை எல்லோரும் பதிவு செய்வதை பார்க்கக் முடிகிறது.
தமிழகம் ஹிந்துக்கள் பெரும்பான்மை என்பது ஒரு மேம்போக்கான பார்வை. அது வெறும் கூடு இங்கே எத்தனை இந்துக்கள் தன்னை இந்து என்றும், பாரதத்தின் புதல்வர்கள் என்று நினைக்கிறார்கள்? என்பதை கவனிக்க வேண்டும்.
அந்த கோவிலுக்கு செல்லும் கூட்டத்திடம் மெல்ல பிராமண வெறுப்பை பேசுங்கள் கூட்டம் உங்களோடு சேர்ந்து ஆர்ப்பரிக்கும். அந்த கூட்டத்திலேயே பெரியார் சொன்னது சரிதான் என்று சொல்லிப் பாருங்கள் ஆமாம் என்று ஒத்து ஊதும்.
இங்கு வழிபாடு என்பதே ஒரு பேராசையின் வழியேயும், அதிதீவிரமான ஜோதிட நம்பிக்கையின் வழியினாலும் பெருகி நிற்கிறது. இன்னும் சொல்லப் போனால் பெண்களால் அது வாழ்கிறது. அந்த கூட்டத்தில் பலர் மூளை சலவை செய்யப்பட்ட கிரிப்டோதான் அது அவர்களில் எத்தனை சதவிகிதம் என்பதுதான் நாம் கவனிக்கத்தக்கது.
முன்பெல்லாம் ஜாதி பேதமில்லாமல் அந்த ஊரினுடைய பெரிய கோவிலின் விழாக்கள் பற்றியும் உற்சவர், மூலவர் விசேஷ அலங்காரங்கள் குறித்தும் தெரிந்து வைத்திருப்பார்கள். எப்போது என்ன உடை சாமிக்கு சாத்துவார்கள்,என்ன இசை வாசிப்பார்கள் இங்கே தலபுராண சிறப்பு என்ன? என்ன வகையான மந்திரம் எப்போது?அத்தியயனம் செய்வார்கள் என்பதை எல்லாம் விவரம் மாறாமல் சாதரணமாக கோவிலுக்கு வருபவர் புட்டு புட்டு வைத்துவிடுவார். ஆனால் இன்று அவற்றை சொல்கிற 40 வயதுக்கு குறைந்தவர் யாரும் இல்லை.இறைவன்,இறைவியை அரசன், அரசியாக கொண்டு இங்கே மெல்ல இழுத்து கட்டப்பட்டிருக்கும் விழாக்களை பற்றி புரிந்துகொள்ளாமலே மரபை விட்டு வெளியேறிவிட்டது ஒரு பெருங்கூட்டம்.
ஒரு ஊர் இருந்தால் அந்த ஊரினுடைய நடுநாயகம் அந்தக் கோவில் வாழ் உறையும் இறைவன்.திருவாரூர் என்றால் அங்கே நடப்பது தியாகராஜனின் ஆட்சி,அவன் பெயரிலேயே ஊரும்,அந்த நிலமும்.அவனுக்கு மன்னன் தொடங்கி கடைசி மனிதன் வரை அடிமை ஏவலாள் என்பது போல கட்டியமைத்து எழுப்பப் பட்டிருக்கும் கோட்டை இந்து மத வாழ்வியல் இந்த மரபை விட்டு வெளியேறிவிட்டோம்.இதை குதர்க்கமாக தங்கள் நக்கலின் வழியேயும்,அற்பத்தனமான கெக்கலிப்புகளாலும் அணுகுகிற ஒரு மூடத்தனத்தை பெரியாரியத்தால் நாம் பெற்றுவிட்டோம்.
குவித்த புருவத்தையும் கோவை செவ்வாயையும் உடைய நடராஜர் என்னும் அதிஉச்ச கலையை காண்பதற்காக உயிர்வாழ்வதில் என்ன தவறு என்று இலக்கிய தளத்தில் இருந்து புதுமைப்பித்தன் கேட்பார்.
அப்படிப்பட்ட சிந்தனை கூட இல்லாத ஒரு பாலைக்குடிகளாக மாற்றப் பட்டிருக்கிறோம் என்கிற நிலைதான் இன்று உள்ளது.எனக்கு பலநேரம் தோன்றுவது இந்த கோவில்களை, இந்த இலக்கியங்களை, இந்த பண்பாட்டு கூட்டை எல்லாம் யாராவது ஏலியன் செய்து வைத்ததா? உண்மையிலேயே நம்முடைய மூதாதையர்கள்தான் செய்தார்களா? என்று சிந்திக்கத் தோன்றுகிற அளவிற்கு இங்கே கைமீறி சென்றிருக்கிறது.
இறுதியாக இன்று கோவிலுக்கு வரும் பல லட்சம் பேரிடம் பேசிப்பாருங்கள் அவர்களின் பெரும்பான்மையோரிடம் பிராமண வெறுப்பு, இந்திய எதிர்ப்பு, சம்ஸ்கிருத வெறுப்பு இது எல்லாவற்றின் அடையாளமாக இன்று காட்டப்படுகிற மோடி வெறுப்பு ஒளிந்திருக்கும்.கண் மூடித்தனமான பிராமண வெறுப்பு நிச்சயம் இந்து மத வெறுப்பை நோக்கித்தான் ஒருவரை நகர்த்தும் அதுதான் அந்த சூட்சும கயிறு, கிட்டத்தட்ட அதை உருவி முடிவு நிலையில் வைத்திருக்கிறார்கள் என்பதுதான் என் பார்வை.
இன்று கோவிலுக்கு வருபவர்களில் பலர் ஜோதிடம், ஆசை, துன்பம், சுற்றுலா என்கிற கட்டமைப்பி னாலேயே வருகிறார்கள். அவர்களில் பலருக்கு ஒரு பாரம்பரியத்தை, சடங்கை மதிக்கும் பொறுமை கூட இருக்காது.
எனவே இவர்களால் இந்து மத விரோதிகளை அடையாளம் காண முடியும் என்றெல்லாம் நான் நம்பவில்லை. இவர்கள்தான் அந்த விரோதிகளே, லாசரஸ் சொன்னது போல நாளை கைவிடப்பட்ட கோவில்களில் கொண்டு போய் இயேசுவை வைத்து பணம் கொட்டும் என்று ஜோதிடரை வைத்து சொல்ல வைத்தால் கேள்வியே கேட்காமல் இந்த கூட்டம் அதன் பின்னால் செல்லும்.
தமிழகம் முழுக்க பல குக்கிராம கோவில்களுக்கு சென்றிருக்கிறேன். எல்லா ஊரிலும் மைய சிவன் கோவில் கைவிடப்பட்டுதான் கிடக்கிறது. ஏதோ பல ஐய்யங்கார்கள் வெளிநாடுகளில் குடிபெயர்ந்து பணம் வசூல் செய்து பெருமாள் கோவில்களை சீர்படுத்தி வைத்திருக்கிறார்கள். ஆனால் உள்ளூரிலேயே கோவில் சொத்தை திருடி தின்று, அந்த கோவிலின் விலைமதிக்க முடியாத மேன்மையை ஒழித்துவிடுகிறது ஒரு அடாவடி கூட்டம்.
வெளியூரில் இருந்து ஆள் அதிகம் வந்தவுடன் அங்கே அதிக விலையில் பொருட்களை விற்கும் கடை போட ஒரு கூட்டம் வரும் அவர்களை வைத்துதான் நாம் Natural hindutuva state என்று சொல்லுகிறோம்.
நான் ஏசி ரூமில் அமர்ந்து கொண்டு இதை பேசவில்லை… களத்தில் கவனித்துதான் பேசுகிறேன்.
இங்கு ஓரளவாவது இந்து என்கிற உணர்ச்சியும், அர்பணிப்பும் வருகிறதென்றால் அது நிச்சயம் இந்து இயக்கங்களால்தான்.
காரணம் கோவில் பணி, விசேஷம், நாமஜெப கூட்டம், விளக்கீடு விழா என்று எத்தனையோ நிகழ்வுகளின் கண்ணியாக யார் இருக்கிறார்கள் என்று நூல் பிடித்துக் கொண்டே சென்று பார்த்தால் அங்கே ஒருவர் தீவிரமாக பணியாற்றிக் கொண்டிருப்பார்.
தமிழகத்தின் மிகப்பெரிய பிரச்சனை இங்கே முதலில் ஒரு மனிதன் தன்னை ஜாதியாக உணர்வதுதான். நான் ஜாதி தவறென்று சொல்லவில்லை அதன் சமூக இயங்கியலை புரிந்து கொள்கிறேன் ஆனால் எந்நேரமும் என்னை தனியாக பிரித்து விட்டுவிடு என்று தயார் நிலையில் திரளுவதை ஏற்க முடியாது.
முதலில் தமிழகம் தன் விசாலமான பார்வையை திராவிடத்தால் இழந்துவிட்டது தாழ்வு மனப்பான்மையால் தன்னை குறுக்கிக் கொண்டது. இருட்டில் அடைந்து கிடப்பவன் கதவை திறக்காதே வெளிச்சம் வேண்டாம் என்று கத்துவதை ஒத்திருக்கிறது நமது குரல். ஆண்டவன்தான் நம்மை காப்பாற்ற வேண்டும்.
#தமிழகம் #ஹிந்துமதம் #அரசியல்
Sundar Raja Cholan