கடந்த 2009-ஆம் ஆண்டு நடிகை புவனேஸ்வரி பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். அந்தச் சம்பவம் தமிழ் சினிமா உலகில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியது. அப்போது கைது செய்யப்பட்ட நடிகை புவனேஸ்வரி தனது வாக்குமூலத்தில் மேலும் சில நடிகைகள் இதில் ஈடுபட்டார்கள் என்று கூறியதாக சில ஊடகங்கள் அவர் குறிப்பிட்ட நடிகைகளின் படத்துடன் செய்தி வெளியிட்டன.
இதனாலும் திரை உலகில் சர்ச்சை ஏற்பட்டது. பத்திரிகையாளர்களுக்கு எதிராக கண்டனக் குரல்கள் எழும்பின. நடிகைகளுக்கு ஆதரவாகவும், பத்திரிகைகளுக்கு எதிராகவும் கண்டனக் கூட்டம் நடத்தினர். அந்த கண்டனக் கூட்டத்தில் நடிகர்கள் பலரும் பத்திரிகையாளர்கள் குறித்து தரக்குறைவாகப் பேசினர். இதையடுத்து, பத்திரிகையாளர்களை கடுமையாக விமர்சித்த நடிகை ஸ்ரீபிரியா, சத்யராஜ், விஜயகுமார், சரத்குமார், சூர்யா, அருண் விஜய், விவேக், இயக்குனர் சேரன் உள்ளிட்ட 8 பேர் மீது பல்வேறு பிரிவுகளில் பத்திரிகையாளர்கள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை உதகை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. விசாரணைக்கு சம்பந்தப்பட்ட நடிகர்களை நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டது. ஆனால், அவர்கள் ஆஜராகாமல் இருந்ததால், நடிகர் சூர்யா உள்ளிட்ட 8 பேருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்து உதகை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.