ராகுல் மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஹிந்து மத வெறுப்பு அரசியல். ஹிந்துக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்த அவரது அறிக்கை:
பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தன்னை ஹிந்து என்று கூறிக் கொள்பவர்கள் வன்முறையாளர்கள், பிறரை வெறுப்பவர்கள் , பொய் பேசுபவர்கள் என ஒட்டுமொத்த ஹிந்து சமுதாயத்தை இழிவுபடுத்தி பேசி உள்ளார்.
உலக வரலாற்றிலேயே மதத்தின் பெயரில் போர் செய்யாத, தன் மதத்திற்கு தீங்கு செய்பவர்களுக்கு கூட நன்மை செய்யக்கூடிய மதம் சனாதன ஹிந்து தர்மம் (மதம்).
ஹிந்துக்கள் அனைத்து மத கடவுள் படங்களை கூட தனது வணிக நிறுவனங்களில் வைத்து வணங்கக்கூடிய அளவில் நல்லிணக்கத்தோடு இருக்கக்கூடியவர்கள்.
உலகின் பல நாடுகளில் வசிக்கக் கூடிய ஹிந்துக்களால் அந்த நாட்டில் எந்தவிதமான பிரச்சனைகளும் இல்லை. அந்த நாட்டில் உள்ள மக்களோடு இணக்கமாக வாழ்ந்து வருகிறார்கள்.
அதனால் தான் உலகத் தலைவர்கள் ஹிந்து இதிகாச புராணங்கள் மற்றும் கடவுள்களை போற்றி பெருமைப்படும் வகையில் பேசி வருகிறார்கள்.
ஹிந்துமத நூல்கள் அனைத்தும் உண்மை,சத்தியம் போன்ற உயர்ந்த தத்துவங்களையே வலியுறுத்துகிறது. காந்தியடிகள் கூட ஹிந்து மதத்தில் உள்ள அஹிம்சை ,சத்தியம் போன்றவற்றையே அனைவருக்கும் வலியுறுத்தி வந்தார்.
தற்போது அந்த காந்தி பெயரை பொய்யாக தன் பெயருக்கு பின்னால் பொருத்தியிருக்கும் ராகுல் ஹிந்து மத தத்துவங்கள், பண்பாடு, கலாச்சாரம், பழக்க வழக்கம் ஏதும் அறியாமல் இழிவுபடுத்தி பாராளுமன்றத்தில் பேசி இருப்பது வேதனைக்குரியது.
ஆயிரக்கணக்கான சீக்கியர்களை கொன்று வன்முறை வெறியாட்டம் ஆடிய காங்கிரஸ் தலைவர் இந்துக்களை வன்முறையாளர்கள் என்று கூறுவது வெட்கம்.
கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மத சிறுபான்மையினரை தாஜா செய்து அதன் மூலம் அவர்களின் ஓட்டுக்களை பெற வேண்டும் என்பதற்காக பாரத தேசத்தில் பெரும்பான்மையாக வசித்து வரும் ஹிந்துக்களை வன்முறையாளராகவும், வெறுப்பு உணர்வாளர்களாகவும், பொய்யர்களாகவும் சித்தரித்து இழிவு படுத்திய ராகுல்காந்தியை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. ஹிந்துக்களிடம் அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறது.