காதலித்து திருமணம் செய்த புதுமாப்பிள்ளை சடலத்தின் கழுத்தில் காயங்கள் நிறைய இருந்ததாம். அவரை அடித்து கொன்று ரோட்டோரம் வீசியும் உள்ளனர். இது சம்பந்தமாக 6 பேரிடம் தருமபுரி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே உள்ளது ஓட்டர்திண்ணை என்ற கிராமம். இங்கு வசித்து வந்தவர் விஜி. இவர் அதேபகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி என்ற பெண்ணை காதலித்தார். அந்த பெண்ணும் விஜியை விரும்பினார். விஷயம் ராஜேஸ்வரி வீட்டுக்கு தெரிந்து கொந்தளித்து விட்டனர்.
இதனால், கடுமையான எதிர்ப்பையும் மீறி, 6 மாசத்துக்கு முன்பு ராஜேஸ்வரியை விஜி கல்யாணம் செய்து கொண்டார். பெங்களூருவில் தங்கள் குடும்ப வாழ்வை தொடங்கி இவர்கள், ஒரு காய்கறி கடையை நடத்தி வந்தனர்.
அதற்குள் லாக்டவுன் போட்டுவிடவும், அந்த கடையும் மூடப்பட்டது. அதனால் வருமானத்துக்கு வழியில்லாமல் தம்பதி தவித்தனர். இந்த நிலையில் 3 நாளைக்கு முன்பு ராஜேஸ்வரியின் தந்தை விஜிக்கு போன் செய்தார்.
காய்கறி வியாபாரம் எதுவும் வேணாம், ஊருக்கு வந்து தன்னுடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழிலை செய்யுமாறும், அது சம்பந்தமாக பேசலாம் கிளம்பி வரும்படியும் சொல்லி உள்ளார். அதனால், மாமனாரை பார்த்து பேச, 2 நாளைக்கு முன்பு விஜி ஊருக்கு வந்துள்ளார். ஆனால் அதற்கு பிறகு விஜி பெங்களூர் வந்து சேரவில்லை. மாமனார் வீட்டிலேயே இருப்பார் என்றுதான் அவரது வீட்டினர் நினைத்தனர்.
அதேசமயம் அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. இந்நிலையில்தான், கும்மனூர் அருகே ரோட்டோரம் விஜியின் சடலம் கிடந்ததை பஞ்சப்பள்ளி போலீசார் மீட்டனர். அவரது கழுத்து உட்பட பல பகுதிகளில் காயங்கள் இருந்தன. இதையடுத்து விசாரணையையும் தொடங்கினர். அதற்குள் விஜியின் மாமனார் எஸ்கேப் ஆகிவிட்டார்.
அவர்தான் மருமகனை கொன்றிருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், அவரை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அவர் பெயர் முனிராஜ். பதுங்கி ஒளிந்து கொண்டிருந்த அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்துவிட்டனர். மாமனார் மட்டுமல்லாமல் மேலும் 5 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மருமகனை மாமனார் எப்படி கொன்றார், ஏன் கொன்றார் என்ற விசாரணை தீவிரமாகியும் வருகிறது. தருமபுரியில் இந்த இளைஞர் இறந்து 3 நாட்களுக்கு மேலாகியும், சம்பவத்தின் அதிர்ச்சி கொஞ்சமும் விலகாமல் உள்ளது.