12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் கடும் கட்டுப்பாடுகளுடன் இன்று தொடங்குகின்றன.
தமிழ்நாட்டில் நாள்தோறும் அதிகரித்து வரும் கொரோனா பரவலுக்கு மத்தியில் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் இன்று தொடங்கும் நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் விதித்துள்ளது. மொத்தம் 28 வகையான பாடங்களுக்கு செய்முறைத் தேர்வு நடைபெறும் என்பதால், பாட வாரியாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மாணவர்கள் அடிக்கடி கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்துகொள்ள வேண்டும், ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனி இட வசதி ஏற்படுத்தித் தர வேண்டும், ஆய்வகங்கள் மற்றும் ஆய்வக பொருட்களை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும், மாணவர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மேலும் 28 பாடங்களுக்கான செய்முறைத் தேர்வுகளையும் வரும் 23-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் எனவும் அதன் மதிப்பெண்களை வரும் 24-ம் தேதிக்குள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.