ஐ.என்.எக்ஸ். மீடியா தொடர்பான நிதி முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு மேலும் ஒரு நாள் காவலை நீட்டித்து தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐ.என்.எக்ஸ். மீடியா தொடர்பான முறைகேடு வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து 22ஆம் தேதி சிபிஐ காவலில் எடுக்கப்பட்டு சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப் பட்டார். ஆனால் அவர் விசாரணையின் போது எதையும் சொல்ல மறுக்கிறார் என்றும், விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார் என்றும் நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்தது.
இந்நிலையில், சிதம்பரம் காவல் சிபிஐ நீதிமன்றத்தால் இரண்டு முறை நீட்டிக்கப் பட்டது.
இந்நிலையில் தில்லி ரோஸ் நீதிமன்றத்தில் சிதம்பரம் இன்று மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது காவலை ஒருநாள் நீட்டிக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனை ஏற்று ஒரு நாள் நீட்டித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
ப.சிதம்பரம் இடைக்கால ஜாமின் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், அந்த ஜாமீன் மனு மீதான விசாரணை சிபிஐ நீதிமன்றத்தில் நாளை நடைபெறுகிறது.
முன்னதாக, இன்று உச்ச நீதிமன்றத்தில் அடுத்து வரும் 3 நாட்களுக்கு ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப் படக் கூடாது என்று உத்தரவிட்டது.