சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து லேண்டர் ‘விக்ரம்’ வெற்றிகரமாக தனியாக பிரிக்கப்பட்டுள்ளது. இதனை இஸ்ரோ தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ கடந்த ஜூலை மாதம் 22ம் தேதி, சந்திரயான்-2 விண்கலத்தை ஏவியது.
பின்னர் அதன் பயணத்தில், புவி வட்டப் பாதையில் சுற்றி, தொடர்ந்து புவி வட்டப் பாதையில் இருந்து பிரிக்கப் பட்டு, நிலவின் பாதையில் சுற்றத் தொடங்கியது சந்திரயான் விண்கலம்.
சந்திரயான் 2 விண்கலத்தின் முக்கிய பாகமான லேண்டர் எனப்படும் நிலவின் தரையில் இறங்கும் கருவியான விக்ரம் என பெயரிடப்பட்ட லேண்டரை தனியாகப் பிரிப்பதற்கான முயற்சிகளை இஸ்ரோ மேற்கொண்டது. அதற்கு வசதியாக, சந்திரயான் 2 விண்கலத்தின் வேகம் படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து லேண்டரைப் பிரிக்கும் பணியை செப்.2 திங்கள் இன்று பிற்பகல் 1.16க்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். அதன்படி, லேண்டர் தனியாகப் பிரிக்கப் பட்டது.
நிலவின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வந்த சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட லேண்டர் விக்ரம், செப்.7 ஆம் தேதி அன்று நிலவின் தெற்குப் பகுதியில் நிலவில் தரையிறங்கும்.
இதனை தூர்தர்ஷன் நேரலையாக ஒளிபரப்பு செய்கிறது. இது, அதன் டிவிட்டர் பதிவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.