கோலாலம்பூர், அக் .13: புலிகள் சார்பு தென்னிந்திய அரசியல்வாதி, ஆமைக்கறி புகழ் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை மலேசிய போலீசார் கண்காணிக்கின்றனர்!
தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.டி.டி.இ) இயக்கத்தைப் பற்றியும், அதற்கு அளித்த ஆதரவைப் பற்றியும் பேசி வருவதால், மலேசிய காவல்துறையினர் தென்னிந்திய அரசியல்வாதியும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமானை தங்கள் கண்காணிப்புப் பட்டியலில் சேர்த்துள்ளனர்.
புக்கிட் அமனின் சிறப்பு கிளை பயங்கரவாத தடுப்பு பிரிவு (இ 8) தலைவர், துணை கமாண்டர் டத்துக் அயோப் கான் மைதீன் பிட்சை, இது குறித்துக் கூறிய போது, முன்னர் மலேசியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த தென்னிந்திய நடிகரான சீமான், நாட்டில் எல்.டி.டி.இ. நபர்களுடன் கொண்டுள்ள நெருக்கமான உறவுகள் குறித்து விசாரிக்கப்படும் என்றார்.
“அவர் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதப்பட்டால், மலேசியாவிற்குள் அவர் நுழைவதற்கு அதிகாரிகள் தடைசெய்வர் என்று அவர் கூறினார். “இதுவரை காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 12 பேரிடம் நாங்கள் நடத்தும் விசாரணைகளைப் பொறுத்து இந்த முடிவு எடுக்கப் படும்” என்று அவர் கூறினார்.
“நிதி உதவியை ஊக்குவிப்பதிலும், பெறப்படும் நிதியை இயக்கத்தின் நடவடிக்கைகளுக்கு சேர்ப்பதிலும் அவரது பங்கு எவ்வளவு ஆழமாக உள்ளது, அல்லது மலேசியாவில் உள்ள விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களின் செயல்பாடுகளை மேற்கொள்வதற்கு ஆலோசனைகள் வழங்குவது குறித்து நாங்கள் கண்காணிப்போம்….
“இதன் அடிப்படையில் அவர் மலேசியாவிற்குள் நுழைவதைத் தடுக்க குடிவரவு (இமிக்ரேஷன்) துறையிடம் நாட்டுக்குள் நுழைவதைத் தடுக்கக் கோருவோம்” என்று அயோப் இன்று புக்கிட் அமனில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
இந்தியாவில் எல்.டி.டி.ஈ உடன் சீமானின் தீவிர ஈடுபாடு குறித்து காவல்துறையினர் அறிந்திருப்பதாகவும், தரவுகளை வைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
எல்.டி.டி.ஈ., தொடர்புடைய உள்ளூர் அரசியல் தலைவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட சீமான் உள்ளிட்ட வெளிநாட்டுத் தலைவர்கள் நாட்டுக்குள் நுழைவதில் இருந்து போலீஸாரால் தடை செய்யப் படுவார்களா என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த அயோப், எல்.டி.டி.ஈ என்பது ஒரு பிரிவினைவாத குழு, இது 2009 இல் அதிகார பூர்வமாக தோற்கடிக்கப்படும் வரை இலங்கையில் செயல்பட்டு வந்தது. மலேசியா உட்பட 32 நாடுகளால் இது ஒரு பயங்கரவாத குழு என வகைப்படுத்தப்பட்டுள்ளது, இது கடந்த 2014 இல் இவ்வாறு வகைப்படுத்தப் பட்டது.
மனிதவளத்துறை அமைச்சர் எம். குலசேகரனுடன் சீமான் இருக்கும் அண்மைய புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. இது டிஏபி தலைவரை காவலில் வைக்க போலீசாருக்கு அறிவுறுத்தலை வழங்கியது.
இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பின் போது, குலசேகரன் மற்றும் சீமான் உடன் இருக்கும் புகைப்படம் குறித்த பிரச்னையில் அயோப் கூறிய போது, விவகாரத்துக்குரிய சில நபர்களுடன் புகைப்படம் எடுப்பதன் மூலம் ஒருவர் எந்தவொரு குற்றத்துக்கும் உடந்தையாக இருப்பதாக உடனடியாக கருத இடமில்லை என்றார்.
“புகைப்படங்கள் மட்டுமே எடுத்துக் கொண்டதால் இந்தப் பிரச்னை இல்லை! பலர் சில நபர்களுடன் புகைப்படங்களை எடுத்துக் கொள்கிறார்கள். குண்டர்களுடன் புகைப்படம் எடுப்பவர்களும் இருக்கிறார்கள் என்று சொல்லுங்கள், பின்னர் குண்டர்கள் சிக்கிக் கொள்கிறார்கள். அவர்களுக்கு குண்டர்களுடன் தொடர்பு இருப்பதாக அர்த்தம் சொல்ல முடியுமா?
“எனவே, இது குறித்து நாங்கள் ஒரு விரிவான விசாரணையை நடத்த வேண்டும்! மேலும் சில தலைவர்களுடன் புகைப்படங்களை எடுத்துக் கொண்டதால் மட்டும், அவர்களை பயங்கரவாத குழுக்களுடன் இணைப்பதாகக் கூறுவது நியாயமற்றது, ”என்று அயோப் கூறினார்!
யாருடைய அரசியல் தொடர்பையும் பொருட்படுத்தாமல், காவல்துறை அச்சமோ தலையீடோ இல்லாமல் விசாரிக்கும் என்ற தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார் அயோப்.
“ஆனால் இத்தகைய சூழலில், வெறுமனே புகைப்படங்களை எடுத்துக் கொள்வது ஒரு குற்றமல்ல,” என்றும் தெளிவாக்கினார் அயோப்.
எல்.டி.டி.ஈ உடன் தனக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் விசாரணையை காவல்துறையினரிடம் விட்டுவிடுவதாக குலசேகரன் கூறியுள்ளதை அரசின் புதிய நிறுவனம் பெர்னாமா நேற்று மேற்கோளிட்டுக் காட்டியது. தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட புகைப்படத்தின் அடிப்படையில் மட்டுமே என்று அறியப்படாத இடத்தில் இருந்து தகவல் வந்ததாக அவர் கூறியிருந்தார்.
News Source: https://www.malaymail.com/
முன்னதாக, மலேசியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக எம்.எல்.ஏக்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்
அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில்… விடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் சாமிநாதன், சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் உள்ளிட்ட எழுவரை மலேசியக் காவல்துறை கைதுசெய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
தீவிரவாத ஒழிப்பு எனும் பெயரில் ஈழ நிலத்தில் ஓர் இன அழிப்பை நிகழ்த்தி இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்று குவித்த இந்நூற்றாண்டின் மிகக்கொடிய இனப் படுகொலைக்கு நீதிகேட்டு உலகம் முழுக்க வாழும் தமிழ் மக்கள் போராடிக்கொண்டும், அதற்காகக் கூக்குரலிட்டுக் கொண்டிருக்கும் வேளையில் இதுபோன்ற கைது நடவடிக்கைகள் மூலம் தமிழர்களைக் குற்றவாளிகளாகச் சர்வதேசச் சமூகத்தின் கண்முன்னே நிறுத்தும் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.
தமிழ்த்தேசிய இனத்தின் பாதுகாப்புக் காப்பரண்களாக விளங்கிய தமிழீழ விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என சித்திரித்து அறமற்ற நெறி பிறழ்ந்த ஆயுதப்போரின் மூலம் வல்லாதிக்கங்களின் துணைகொண்டு அவ்வமைப்பை அழித்து முடித்துவிட்டப் பிறகும், புலிகளின் பெயரைச் சொல்லித் தமிழர்களைக் கைதுசெய்வது எந்தவகையிலும் ஏற்புடையதில்லை.
விடுதலைப்புலிகளை அழித்து முடித்துவிட்டதாக அறிவித்துவிட்ட பிறகு, புலிகள் மீதான தடையே தேவையற்றது எனக்கூறி அத்தடையை நாங்கள் நீக்க வலியுறுத்துவது இதனால்தான்.
உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு பாதுகாப்புப் பேரரணாக விளங்கி, தமிழர்களின் அடிமை விலங்கொடிக்கப் போராடிய புலிகளின் பெயராலேயே தமிழர்களைக் கைதுசெய்து அடிமைப்படுத்தும் இப்போக்கு எதன்பொருட்டும் சகிக்க முடியாத பெருங்கொடுமையாகும்.
பத்தாண்டுகளைக் கடந்தும் தமிழீழத்தில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கு இதுவரை நீதிகிடைத்திடாது வஞ்சிக்கப்பட்டு அடிமை நிலையில் இருக்கிற தமிழ்த்தேசிய இன மக்களைக் கைதுசெய்து குற்றவாளிகளாக உலகத்தவரின் பார்வையில் நிறுத்த முற்படுவது மிகப்பெரும் அநீதியாகும்.
ஆகவே, விடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக மலேசியாவில் கைதுசெய்யப்பட்ட மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் சாமிநாதன் உள்ளிட்ட எழுவரையும் எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.. என்று தெரிவித்திருந்தார் சீமான்.