இன்று வால்மீகி ஜெயந்தி நாடு முழுவதும் கொண்டாடப் படுகிறது. மகரிஷி வால்மீகியின் சந்ததியினராக தங்களைக் கருதும் “வால்மீகிக்கள்” (Balmikis) எனப்படும் வனவாசி சமுதாயத்தினர் உ.பி, பீகார், ம.பி என்று பல மாநிலங்களில் உள்ளனர்.
இந்த சமுதாயம் சார்ந்த அமைப்புகளும் ஆதிகவியின் பிறந்த நாளை தங்கள் சமுதாய எழுச்சியின் அடையாளமாக விமர்சையுடன் கொண்டாடினர். மத்திய அரசும் பல மாநில அரசுகளும் இந்த நன்னாளில் பட்டியல் பழங்குடியினர் (Scheduled Tribes) சமூக மேம்பாடு குறித்து திட்டங்களையும் ஆக்கபூர்வமான செயல்பாடுகளையும் அறிவித்துள்ளன. ஆதிகவியின் புனித நினைவை ஒட்டுமொத்த இந்து சமுதாயமும் இப்படிப் பலவிதங்களில் போற்றுவது பெருமைக்குரிய விஷயம்.
தமிழ்நாட்டிலும் வால்மீகி ஜெயந்தியை சமுதாய எழுச்சி விழாவாகக் கொண்டாடும் மரபை ராமாயண அன்பர்களும் இந்து அமைப்புக்களும் தொடர்ந்து செயல்படுத்தி வரவேண்டும். ஆயிரம் ஆண்டுகள் முன்பு நம் கவிச்சக்கரவர்த்தி கம்பர் போற்றிய வால்மீகி முனிவரின் புனித நினைவைத் தமிழர்களாகிய நாம் கொண்டாடுவது மிகவும் உகந்தது. கடமையும் கூட.
வாங்க அரும் பாதம் நான்கும்
வகுத்த வான்மீகி என்பான்,
தீம் கவி, செவிகள் ஆரத்
தேவரும் பருகச் செய்தான்;
ஆங்கு, அவன் புகழ்ந்த நாட்டை,
அன்பு எனும் நறவம் மாந்தி,
மூங்கையான் பேசல் உற்றான்
என்ன, யான் மொழியல் உற்றேன்.
– பாலகாண்டம், நாட்டுப் படலம்
(வாங்க அரும் – எடுக்க முடியாத; பாதம் – அடிகள்; வகுத்த – இயற்றிய; தீம் கவி – அமுதமயமான கவி; நறவம் – மது; மாந்தி – பருகி; மூங்கையான் – ஊமை; மொழியல் – பேசுதல்)
ஒரு சொல்லைக் கூட எடுத்து விட முடியாதபடி, நான்கு அடிகள் கொண்ட (இருபத்து நான்காயிரம்) சுலோகங்களால் இராமாயணத்தை இயற்றினான் வால்மீகி முனிவன். தேவர்களும் தம் செவிகளே வாயாகப் பருகும்படி இனிமையான அமுதமயமான கவிதைகளைச் செய்தான். தனது ஆதி காவியத்தில் அந்த முனிவன் புகழ்ந்துரைத்த (கோசல) நாட்டை, அன்பு என்னும் மதுவைப் பருகி, ஊமையே பேசத் தொடங்கி விட்டான் என்றது போல நான் பேசலானேன்.
கவிதைக் கிளையில் ஏறி நின்று, இனிமை ததும்பும் மொழிகளால் ராம ராம என்று கூவும் வால்மீகிக் குயிலே, உனக்கு வந்தனம்.
கவிதைக் கானகத்தில் திரியும் வால்மீகி என்ற முனி சிம்மத்தின் ராம கதையாகிய கர்ஜனையைக் கேட்ட பின்பு, பரகதியாகிய மேன்மை நிலையை அடையாதவர் யார் இருக்க முடியும்?
வால்மீகி என்ற மலையில் தோன்றி, புவனம் முழுவதையும் புனிதமடையச் செய்து ராம சாகரத்தைச் சென்றடைகிறது ராமாயணம் என்னும் இந்த மகாநதி !
(வால்மீகி ராமாயண தியான சுலோகங்கள்)
- ஜடாயு, பெங்களூர்