மே 7-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும் என அறிவித்துள்ள தமிழக அரசு, சென்னையில் மட்டும் திறக்கப்பட மாட்டாது என திடீரென தெரிவித்துள்ளது.
கொரானா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு கடந்த 42 நாள்களில் அரசுக்கு மதுக்கடைகள் மூலம் 40 ஆயிரம் கோடி வருமான இழப்பு ஏற்பட்டதாம். இந்நிலையில் பக்கத்து மாநிலமான கர்நாடகம், ஆந்திரத்தில் மதுக்கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டதால் அதையே காரணமாக காட்டி தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்படும் என அறிவித்தது.
ஆனால் அரசின் இந்த முடிவுக்கு அரசியல் கட்சிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலைமையை சமாளிக்க முடிவு செய்த தமிழக அரசு, அதிகாரி ஒருவரை சென்னையில் அதிக தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிடச் சொல்லி, இதை பதில் காரணம் காட்டி சென்னையில் மதுக்கடைகள் திறக்கப்படாது என்ற அறிவிப்பையும் வெளியிட்டதாக சொல்கின்றனர்.
இதுதவிர மதுக்கடைகளில் பணியாற்றும் பணியாளர்களே மதுக்கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து சங்கத்தின் சார்பில் அறிக்கைகள் வெளியிட்டார்களாம். கோயம்பேடு சந்தையி்ல் அதிகக் கூட்டம் கூடியதால் கொரோனா மையமாக கோயம்பேடு மாறியதைப் போல், தொற்று அதிகரிக்க மதுக்கடைகள் பெரும் காரணமாக அமைந்துவிடும் என மதுக்கடை பணியாளர் சங்கத்தினர் அரசை எச்சரித்தனராம். மேலும் இதுதொடர்பாக முதலமைச்சரின் அலுவலகத்திற்கு நேரில் சென்றும் முறையிட்டார்களாம்.
அடுத்தடுத்து வந்த எதிர்ப்புகளைத் தொடர்ந்து, அரசு இந்த அவசர முடிவை எடுத்ததாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், மதுக்கடைகளை திறப்பது நியாயமான செயல் அல்ல என்று நீதிபதிகள் சிலர், அதிருப்தி தெரிவித்துப் பேசியதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பணிபுரியும் வழக்கறிஞர்கள் கூறினராம்.
மதுக்கடைகளை திறக்கும் அறிவிப்பிற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் பெயரில் சில வழக்கறிஞர்கள் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கு இன்றோ அல்லது நாளையோ அவசர வழக்காக விசாரிக்கப்பட்டால் நிச்சயம் தமிழக அரசுக்கு எதி்ராகவே தீர்ப்பு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக போலீஸ் தரப்பிலும் சுட்டிக் காட்டப்பட்டதாம்.
இதையடுத்தே அவசரமாக சென்னைக்கு மட்டும் இந்த அறிவிப்பை வெளியி்ட்ட தமிழக அரசு, இன்னும் இரு தினங்களில் தமிழகம் முழுவதும் கடைகள் திறக்கப்படாது என்ற அறிவிப்பை வெளியிட்டாலும் ஆச்சர்யம் ஏதுமில்லை என்கின்றனர் வழக்கறிஞர்கள்.
- சதானந்தன், சென்னை