ஆகா கடை திறந்துட்டாங்க என்று ஆண்கள் அலைமோதிக் கொண்டிருக்கையில், அவர்களுக்குப் போட்டியாக பெண்கள் சில குயுக்திகளைக் கையாண்டு வருகிறார்கள். ஆண்கள் மதுக்கடைப் பக்கம் போகாமல் இருக்க ஆதார் அட்டையைப் பதுக்கும் பெண்கள்தான் இன்றைய டாஸ்மாக் ரீஓபன் தின ஹைலைட்!
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்று முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் காலை முதலே முண்டியடித்து மது வாங்கிக் குடிக்க மதுபானப் பிரியர்கள் நினைத்தாலும், அரசு விதித்த சில கட்டுப்பாடுகள் அவர்களை மேலும் நெருக்கடிக்குத் தள்ளியுள்ளது. வீட்டில் அன்றாடச் செலவுக்கே பணம் இல்லாமல் தவித்து வந்த கீழ் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகள், டாஸ்மாக் கடைகள் மூடப் பட்டதால், சற்று நிம்மதியுடன் இருந்தனர். ஆனால் இப்போது கடை திறந்து ஆண்கள் சாராயக் கடைக்குச் செல்ல அலை மோதிக் கொண்டிருக்கும் போது, வீட்டில் பெண்மணிகளும் அல்லாடுகிறார்கள். அதனால் அவர்களுக்கு வந்த யோசனைதான், ஆதார் கார்களை மறைத்து வைப்பது!
கடந்த ஒன்றரை மாதங்களாக டாஸ்மாக் கடைகள் மூடப் பட்டிருந்ததால், குடும்ப வன்முறைகளும் வெகுவாகக் குறைந்திருந்தன. மதுபானப் பிரியர்களுக்கும் தங்கள் குடும்பத்தினரோடு அதிக நேரத்தைச் செலவு செய்து, அதன்மூலம் தங்களை சுயபரிசோதனை செய்யவும் வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் சிலர் மனம் திருந்தினர். மதுப் பழக்கத்தால் மது இன்றி வாழ இயலாத சிலரோ கூடுதல் விலை கொடுத்து கள்ளச் சந்தையில் வாங்கியாவது மது வாங்கிக் குடிப்பது, கள்ளச்சாராயத்தை நாடுவது என்று ஈடுபடத் தொடங்கி விட்டார்கள்.
இந்த நிலையில்தான் நிபந்தனைகளுடன் மது விற்கும் முடிவை அரசு எடுத்தது. அதற்கு மது வாங்குபவர்கள் ஆதார் அட்டையைக் கொண்டுவர வேண்டும் என்றும், ஓருவருக்கு ஒரு ஃபுல் தான் எனும் மல்லுக்கட்டியது. இருப்பினும், ‘குடி’மகன்களில் சிலருக்கு ஆதார் அட்டை இதுவரை எடுக்கப் படவில்லையாம். சிலர் வீட்டில், அவர்களது மனைவிகளே அவற்றை எடுத்து மறைத்து வைத்துவிட்டனராம்.
ஊரடங்கு பல வகையிலும் சிரமத்தைக் கொடுத்தது என்றாலும், டாஸ்மாக் கடை மூடப் பட்டிருந்தது பெரும் நிம்மதியாக இருந்தது. வட்டிக்கடைகளும் இல்லை. டாஸ்மாக் கடைகளும் இல்லை என்பதால், பெண்களின் கை, காது, கழுத்தில் இருந்த பொட்டுத் தங்கமும் தப்பித்துக் கொண்டிருந்தது என்கின்றனர் பெண்கள் சிலர்.
ஏற்கெனவே ரேஷன் கார்டு, ஏடிஎம் கார்டு இவற்றை ஒளித்துவைத்து வந்த பெண்கள் இப்போது ஆதார் அட்டையையும் மறைத்து வைக்கின்றனராம்! இருந்தாலும் அதற்கும் தகராறு செய்து கொண்டு, வீடுகளில் சத்தம் அதிகரித்து வருவதாக பெண்கள் சிலர் புலம்புகின்றனர்