புது தில்லி: ஈராக்கில் ஐஎஸ் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்களும் கொல்லப்பட்டதாக அறிவிக்கப் பட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் பேசிய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், இதனை உறுதிப் படுத்தினார்.
முன்னதாக, கடந்த ஆண்டே, ஈராக்கில் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் உயிருடன் இருப்பதற்கான ஆதாரம் ஏதுமில்லை என தில்லி வந்துள்ள ஈராக் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்தார். கடந்த 2014ஆம் ஆண்டு பெட்ரோல் கிணறு கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த 39 இந்தியரை ஐ.எஸ். பயங்கரவாதிகள் கடத்தி சென்றிருந்தனர். மோசூல் நகரம் முழுவதும் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்து வந்ததால் கடத்தப்பட்ட இந்தியர்களை மீட்பதில் சிக்கல்நிலை காணப்பட்டது.
பின்னர், மோசூல் நகரம் மீண்டும் அரசின் வசம் வந்த நிலையில் கடத்தப்பட்ட இந்தியர்களை தேடி கண்டுபிடித்து ஒப்படைக்குமாறு இந்திய அரசு கோரிக்கை விடுத்தது. அதன் பின்னர் இந்தியாவுக்கு வந்த ஈராக் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் இப்ராஹிம் அல்-எஷைக்கர் அல்-ஜாப்ரி மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்துப் பேசிய போது, அவர்கள் உயிருடன் இருப்பதற்கான ஆதாரம் ஏதுமில்லை என்று கூறினார்.
இருப்பினும், மத்திய அரசின் வெளியுறவுத் துறை தொடர்ந்து அவர்களைத் தேடி வருவதாகக் கூறி வந்தது. இதனால், இந்த விவகாரத்தில் சுஷ்மா ஸ்வராஜ், நாட்டிற்கு தவறான தகவல்கள் தருவதாக எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
கடந்த 2014 முதல் 39 இந்தியர்கள் ஈராக்கில் சிக்கி தவித்தனர். இவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்ற விவரம் தெளிவாகத் தெரியாத நிலையில் இருந்தது. ஆனால், மொசூல் அருகே பாதுஷா சிறையில் அடைக்கப்பட்டதாகவும், இந்த சிறையை ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்ரவாதிகள் தகர்த்து விட்டதாகக் கூறப்பட்டது.