சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை சேலம்-சென்னை விமான சேவையைத் துவக்கி வைத்தார்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும். இது மத்திய அரசின் ‘உடான்’ திட்டத்தின் கீழ் நகர்ப்புற வளர்ச்சிக்காக செயல்படுத்தப் படுவது.
இந்த விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உடான் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம் தமிழகத்திற்கு பல்வேறு நலன்களை நிச்சயம் செயல்படுத்தும். மாநில அரசுகள் மத்திய அரசோடு இணைந்து பணியாற்றினால்தான் மக்களுக்குத் தேவையான திட்டங்களை எளிதில் செயல்படுத்த முடியும். அந்த வகையில், தமிழகம் இணக்கமாக இருப்பதால்தான் எதைக் கேட்டாலும் அதை நிறைவேற்றித் தர பிரதமர் மோடி தயாராக இருக்கிறார்.- என்றார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசிய இந்த உண்மைச் சூழலின் பின்னணியைப் பார்த்து வருகிறோம்.
அதில், கடந்த 60 ஆண்டு கால ஆட்சிகளில் ஏன் மத்திய முதலீடுகளை தமிழகம் ஈர்க்கவில்லை என்பது குறித்தும், தமிழகத்துக்கு வரவேண்டிய பொதுத்துறை நிறுவனங்களின் பல திட்டங்கள், தமிழகத்தில் அமையாமல், மற்ற மாநிலங்களுக்கு கடத்திச் செல்லப்பட்டன என்பது குறித்தும் பார்த்தோம். இந்தக் கட்டுரையில் பொதுத்துறை நிறுவனங்களை தமிழக ஆட்சியாளர்கள் ஏன் அன்னியர்களாகக் கருதி நடத்தி வருகிறார்கள் என்பது குறித்துப் பார்ப்போம்.
பொதுத்துறையை அன்னியர்களாக நடத்தியவர்கள்… யார் என்றால், தமிழக ஆட்சியாளர்கள் மட்டுமே! நாட்டின் பிற பகுதிகளில் எல்லாம் மத்திய அரசுடனான இணக்கத்தைப் பெற்று, தங்கள் தங்கள் மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கு ஆட்சியாளர்கள் முயன்ற போது, கூட்டாட்சித் தத்துவம் என்று சொல்லிச் சொல்லியே, பல செயல்களில் கோட்டை விட்டார்கள் தமிழக ஆட்சியாளர்கள். குறிப்பாக தனித்தமிழ்நாடு, திராவிட நாடு என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்த பிரிவினைவாதக் கருத்துகளாலும், பின்னாளில் கட்சிகளுக்குள்ளேயே ஏற்பட்ட பிரிவினைகளாலும், ஒருவரை ஒருவர் பார்த்தாலே குற்றம் என்ற நிலையில் விரோத மனப்பான்மையை வளர்த்துக் கொண்ட இரு பெரும் கட்சிகளாலும் தமிழகம் பெரிதும் பின் தங்கித்தான் போனது.
தி.மு.க. மற்றும் அ.இ.அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளுமே மத்திய முதலீடுகளை ஈர்க்கும் விஷயத்தில் எவ்வித வேறுபாடும் இல்லாதவை. அக்கறை காட்டாதவை. பொதுத் துறையை இவர்கள் இருவருமே அன்னிய சக்திகளாகவே கருதி நடத்தியிருக்கிறார்கள். பொதுத் துறைகளின் விரிவாக்கத்தின் போது, அவற்றில் எந்த ஆர்வமும் காட்டாமல் இருந்தார்கள்.
1950களிலும் 1960களிலும் காங்கிரஸின் கீழ் மாநிலத்தில் ஆட்சி நடந்தபோது, தமிழகம் பொதுத் துறைகளின் முதலீடுகளை அருமையாக ஈர்த்தது.
ஐசிஎஃப் எனப்படும் இண்டக்ரல் கோச் ஃபேக்டரி, நெய்வேலி நிலக்கரி நிறுவனம், பிஹெச்ஈஎல் எனும் பாரத மிகுமின் நிறுவனம், ஹெச்விஎஃப் எனப்படும் கனரக வாகன தொழிற்சாலை ஆகியவற்றில் கணிசமான முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டன. சம காலத்திய தொழில்நுட்பங்கள், மற்றும் மிகப் பெரிய அளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கின.
இவையே மாநிலத்துக்கு மிகச் சிறந்த திறன் சார் நபர்களை உருவாக்கவும், மேலாண்மை மற்றும் நிர்வாகத் திறன்களை பரிமளிக்கச் செய்யவும், எண்ணற்ற வேலைவாய்ப்புகளையும் வருவாயையும் பெருக்கக் காரணிகளாக அமைந்தன.
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பரந்த அளவிலான மின் மயமாக்கல் திறனைப் பார்த்தால், கிராமப் புறங்களில் விரிவாக்கப்பட்ட மின் விநியோகம் காரணமாக விவசாயத்துக்குத் தேவையான மின்சாரம் கிடைத்து விவசாயம் காப்பாற்றப்பட்டது. இப்போதும் கூட தஞ்சாவூராகட்டும், தென் மாவட்டங்கள் ஆகட்டும், ஏன் வடமாவட்டங்களுக்குக் கூட இதன் பங்களிப்பு மிக அதிகம்!
ஒரு முக்கியமான தருணத்தில் உருவான பாரத மிகுமின் நிறுவனம்- பிஹெச்ஈஎல், திருச்சியை எங்கோ உயரத்துக்குக் கொண்டு சென்றது. பொறியியல் துறையில், ஃபேப்ரிகேஷன், வெல்டிங், என உலோகங்களை உருக்கியும், வளைத்தும் அவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் எண்ணற்ற சிறு சிறு தொழிலகங்கள் குடிசைத் தொழில் போல் உருவாகக் காரணமாக அமைந்தது. இந்த ஒரு நிறுவனத்தால், நூற்றுக்கணக்கான துணை தொழில்கள் பெருகின. காற்றாலைகளுக்கான, உலோகங்களை உருக்கும் பொறியியல் துறைக்கான முன்னணி மையமாக திருச்சியை உருவாக்கியிருக்கிறது.
1967க்குப் பின்னர் கடந்த 50 வருடங்களில், சினிமாத் துறையில் பிரபலமானவர்களால் தமிழகம் ஆளப்பட்டுள்ளது. அரசை நடத்தியவர்களுக்கு அரசாள்வதில், நிர்வாகத்தில், தொழில்துறையில், அடிப்படைக் கட்டுமானத் துறையில், மாநில வளர்ச்சியில் குறைந்த அளவே அனுபவமும் திறமையும் இருந்தது.
குறிப்பாக, சி.என். அண்ணாதுரை, மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என இவர்கள் அனைவருமே வெளிநாடுகளுக்கு மிக அரிதாகவே பயணம் மேற்கொண்டிருக்கிறார்கள். இவ்வளவுக்கும் அவை எல்லாம் வளர்ச்சிக்கான ஒத்துழைப்பில் தங்கள் நாட்டின் கதவுகளைத் திறந்தே வைத்திருந்தன. ஆனால் இவர்களோ தங்கள் சினிமாத் துறை சார்ந்த பிரபலங்களை, ரசிகர்களை, நண்பர்களை, அதிபர்களை, கட்சிக்காரர்களைச் சந்திப்பதில் மனநிறைவு கண்டார்கள். கருணாநிதி மிக நீண்ட பொழுதுகளை தன் துதிபாடிகளுடன், கணக்கற்ற தொலைக்காட்சி சார்ந்த நிகழ்ச்சிகளில் வீணடித்ததுதான் நம் நினைவுக்கு வருகிறது.
அடுத்து, முதலீடுகளை ஈர்ப்பதில, முதலீட்டாளர்களை ஈர்ப்பதில், வர்த்தகத் தலைவர்களுடனான இணக்கம் மற்றும் அறிமுகங்களைப் பெறுவதில் ஏன் தமிழகத் தலைவர்கள் பின் தங்கிப் போனார்கள்? அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.