சுமார் மூன்று மணி நேரம். மனசுக்கு ரொம்ப நிறைவா இருந்துச்சுங்க… நேரம் போனதே தெர்ல… இப்படித்தான் சொன்னார்கள் பலரும்! இது நமது தமிழ் தினசரியின் பத்தாம் ஆண்டு விழாவில் கேட்ட வாசகங்கள்!
நிகழ்ச்சி பற்றி அடியேனிடம் கருத்து சொன்ன சிலர் முக்கியமாக குறிப்பிட்டது… எந்த பரபரப்பு படபடப்பு துரத்தல்கள் டென்ஷன் எதுவும் இல்லாமல் மிக இயல்பாக அமைதியாக தியான மன நிலையில் அமர்ந்து ஒரு சத்தான நிகழ்ச்சியை பார்ப்பது போல் மனம் ஒன்றி இருந்தது என்று கூறினார்கள். நாங்கள் எத்தனையோ நிகழ்ச்சிகளுக்கு சென்று இருக்கிறோம் சில நிகழ்ச்சிகளில் அங்கும் இங்கும் அலைந்து சிலர் ஒரு பரபரப்பை ஏற்படுத்துவார்கள் மேடை பரபரப்பு இருக்கும் சில இடங்களில் நேரமாகிவிட்டது என்று துரத்துவார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையை பார்க்கும் நமக்கும் ஒரு பார்வையாளராக படபடப்பு தொற்றிக் கொள்ளும் அதுவெல்லாம் இல்லாமல் ஆற்றொழுக்கான அமைதியான நீரோடை போல நிகழ்ச்சி அமைந்திருந்தது என்று கூறினார்கள்.
அதற்கு காரணம் முகப்பிலேயே நாம் வைத்திருந்த ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகளின் முகம் என்பதை உறுதியாக சொல்வேன். வீட்டிலேயே ஏதாவது சத்தம் போட்டு கலகலவென்று இருந்தால் என் தாயார் சொல்வார்கள்… “சுவாமியின் திருமுகத்தை பார் உள்ளத்தில் அமைதி குடிகொண்டு விடும்” என்பதாக! அது உண்மைதான் என்பதை உணர்ந்த தருணம் அது.
அடுத்து, நிகழ்ச்சியை அமைத்த விதம். நம் நண்பர், கலைம்கள் பதிப்பாளர் பிடி ராஜன் முன்னதாகவே வந்து, மேஜையில் யாருக்கெல்லாம் சால்வை அணிவிக்க வேண்டும், என்ன அணிவிக்க வேண்டும், யாருக்கு புத்தகம் பரிசு, விருது பெறுவபவர்களுக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பதை மொத்தமாக ஒவ்வொரு செட்டாக எடுத்து வைத்து, கலைமகள் அலுவலகத்தின் சார்பில் அங்கே பணி புரியும் திரு. அசோக் அவர்களை அதற்கு பொறுப்பாளராக அமர்த்தி, வழிகாட்டினார். மேடையில் கலைமகள் ஆசிரியர் திரு. கீழாம்பூரும், மேடைக்குக் கீழே கலைமகள் பதிப்பாளர் திரு. பி.டி. ராஜனும் இருந்து கவனித்துக் கொண்டதால், நிகழ்ச்சி இன்னும் எளிதாக, தொய்வின்றி சென்றது என்பதை, நிகழ்ச்சி குறித்து கருத்துரைத்தவர்களுக்குத் தெரிவித்துக் கொண்டேன்.
அடுத்து இது ஒரு குடும்ப நிகழ்ச்சி மாதிரி அமைந்தது தான்! ஆம் இது நம் தினசரி குழுவின் குடும்பம். உறவுகளைப் பேணும் விதமாக நட்பு உறவுகளைப் பேணிய விதமாக வந்திருந்ததுதான்! சுமார் நூறு பேர் அந்த அரங்கில் நிறைந்திருந்து நல் விருந்து பெற்றார்கள்!
இத வருடம் தெய்வத் தமிழர் விருது பெற நாம் தேர்வு செய்தவர்கள் …
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
இயற்பியலில் முது அறிவியல், தமிழ், வரலாற்றில் முதுகலைப் பட்டங்கள், ஆய்வியல் நிறைஞர் பட்டம், மற்றும் தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர்.
- வானிலை ஆய்வுத் துறையில் 39 ஆண்டுகள் பணிபுரிந்து வானிலையாளராக ஓய்வு பெற்றவர். வானிலை தொடர்பான கட்டுரைகள் பல எழுதியுள்ளார். 21 நூல்கள் எழுதியுள்ளார்.
- பிரதமர் மோதி, அமித் ஷா ஆகியோரின் பேச்சுகளை தொலைக்காட்சி நேரலையாக தமிழில் மொழிபெயர்க்கிறார்,
- தினசரி தளத்தில் ‘திருப்புகழ் கதைகள்’, பாரதியின் கண்ணன் பாட்டு, விநாயகர் நான்மணிமாலை பற்றி தொடர் கட்டுரைகள் எழுதியவர், விளையாட்டு, ஆன்மீகம், வானிலை என தினசரியில் செய்திக் கட்டுரைகளை எழுதி வரும்…
டி.எஸ். வேங்கடேசன்
- 40 ஆண்டுகளுக்கும் மேல் இதழியல், ஊடகப் பணியில் தன்னை கரைத்துக் கொண்டவர், வணிகவியல் பட்டதாரி, இதழியலில் மேற்படிப்பு படித்தவர்,
- தி ஸ்டேட்ஸ்மென், ஷிப்பிங் டுடே, டெக்ஸ்காட் கூரியர், கேபிடல் மார்க்கெட், சதர்ன் கேபிடல் நியூஸ், சென்னை நூன் டைம், நியூஸ் டுடே, என ஆங்கிலப் பத்திரிகைகளிலும், சன் நியூஸ், சத்யம் டிவி, ஜி டிவி, இமயம் டிவி என டிவி.,க்களிலும், தினகரன், தினமணி இதழ்களிலும் பணியாற்றியவர்,
- ஆர்கனைசர் வார இதழிலும், தளத்திலும் தொடர்ந்து அரசியல் சமூக வணிகக் கட்டுரைகளை எழுதி வருபவர்,
- தினசரி தளத்தின் செய்தியாளர்களில் ஒருவருமான …
பி. ஜெகந்நாத்
சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர், சநாதனப் பற்றுடன் போராளி, பொதுநல வழக்கினால் தமிழகத்தில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு அமையக் காரணமானவர்,
- திருப்போரூர் முருகன் கோயில், ஆளவந்தார் நாயக்கர் கோயில் நில ஆக்கிரமிப்பு விவகாரங்களில் பொது நல மனுக்களின் மூலம் தீர்வு கண்டவர்,
- ஆலயங்கள், ஆலய இடங்கள் தொடர்பு பிரச்னைகளில் வென்று நல்ல தீர்ப்புகளை சமுதாயத்துக்கு பெற்றுத் தந்தவர்,
- சட்டப் பிரச்னைகள் ஏற்படும் போது தேசியக் கண்ணோட்டத்தில் அணுகி தமிழகத்தின் தேசியக் கருத்தோட்டத்தை வலுவாக வெளிப்படுத்துபவர்,
ஜெயந்தி ஐயங்கார்
- பொருளாதாரம், சமூகவியல், தகவல் தொழில்நுட்பங்களில் முதுகலையும் பொருளாதாரத்தில் எம்.பில்., பட்டமும் பெற்றவர்.
- 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு தகவல் தொழில்நுட்ப நுண்திறன் பயிற்சி அளித்து வேலைவாய்ப்புக்கு உதவியவர்.
- பல்வேறு நிகழ்ச்சிகளை வழிநடத்தியும் தொகுத்தும் கொடுத்து மெருகேற்றுபவர்.
- கம்ப ராமாயணம், ஆழ்வார் பாசுரங்களில் விருப்பம் கொண்டு ஆன்மிகச் சொற்பொழிவுகளை நிகழ்த்துபவர்..
ஓவியர் ஜெ.பிரபாகர்
அசோக் லேலண்ட், டிசிஎஸ் உள்ளிட்டவற்றில் பணியாற்றி, தொடக்க காலத்தில் நல்லோர் வட்டம் அமைப்பின் மூலம் சமூக சேவைகளில் களம் இறங்கியவர்,
- என்டிஎஸ்ஓ., தன்னார்வத் தொண்டு அமைப்பு மூலம் தமிழகம் முழுக்க கல்வி, மருத்துவ, ஏழைகளுக்கான சேவைப் பணிகளை செய்து வருபவர்,
- அவற்றின் ஒருங்கிணைப்புத் தளமாக ‘எண்ணங்களின் சங்கமம்’ அமைப்பை சிறப்பாக நடத்தி வருபவர்,
- கோட்டோவியத்தில் பெரும் ஈடுபாடு கொண்டு, தேசத் தலைவர்கள், ஆலயங்கள், இறை உருவங்கள், திருமேனிகளை அழகாகக் காட்சிப்படுத்துபவர்…
விழாவில் கலந்து கொண்ட நம் தினசரி குழுவின் அன்பர்கள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டேன்
இந்த முறை விருந்தினர்களுக்கும் விருது பெறுபவர்களுக்கும் என்ன பரிசளைக்கலாம் என்று யோசித்த போது, அயோத்தி பால ராமரே முதலில் மனத்தில் உதித்தார். படம் அல்லாமல் வேறு என்ன செய்யலாம் என்று நினைத்த போது, அமேசானில் இந்த ராமனின் 2டி கட் அவுட் சிறப்பாக இருந்தது. அதுவே 15 ஆர்டர் செய்து வரவழைத்தேன்.
நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு என்ன கொடுக்கலாம் என்று யோசித்த போது, சரியாக, வெள்ளிக்கிழமை மாலை 5.30க்கு தான் ஒரு யோசனை. மதுரையில் இருக்கும் என் தங்கை கணவர் சம்பத் வேங்கடேஷை தொடர்பு கொண்டேன். 100 பாக்கெட் சைஸ் ராமர் படம் லேமினேட் செய்து வேண்டுமே… எப்படி தயார் செய்வது என்று கேட்டேன்.
நீர் படத்தை அனுப்பும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி, 5.45க்கு மெயில் பெற்று, மதுரை டவுன் போய் பிரிண்ட் அவுட் எடுத்து, வீட்டுக்கு வந்து (லேமினேஷன் மெஷின் வீட்டிலேயே இருப்பதால்) அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் தயாரித்து, இரவு மதுரை பாண்டியன் ரயிலில் கிளம்பிய ஸ்ரீனிவாசன்ஜியிடம் கொடுத்து … எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி விட்டார்.
ஆகவே தான், அயோத்தி குழந்தை ராமர் நம் தெய்வத் தமிழர் விருது வழங்கும் விழாவில் அனைவருக்கும் ஒவ்வொரு விதத்தில் வந்து அமர்ந்து, தெய்வாம்சம் பொருந்தியதாக நிகழ்ச்சியை மாற்றி விட்டார். அன்று, அயோத்தியில் ப்ராணப்ரதிஷ்டை ஆகி, மண்டல பூஜை நிறைவு பெற்ற தினம் வேறு! அவ்வகையில், மண்டல பூஜை நிறைவு நாளில் நம் அன்பர்களின் கைகளில் ராமபிரான் வந்து அமர்ந்து கொண்டதாகவே தோன்றியது.
நிகழ்ச்சி, முன்னதாகவே மனத்தில் யோசித்து திட்டமிட்ட வகையில், அதன்படியே சிறப்பாகச் சென்றது. அதன்படி, முதல் பகுதியின் இறுதியில் சிலருக்கு ஷால் அணிவித்து சிறப்பு செய்ய, நானும் PT ராஜன் ஜியும் எண்ணியிருந்தோம். அவர்களில் ஒருவர், எங்கள் ஊரைச் சேர்ந்த, சொல்லப் போனால் அடுத்த தெருவைச் சேர்ந்த சம வயது நண்பர் – துரை சூரிய பாண்டியன். சிறுவயதுப் பழக்கம். தற்போது, நெற்கட்டான்செவல் மாமன்னர் பூலித்தேவர் வாரிசுதாரர்கள் அறக்கட்டளை அமைத்து, சிறப்பாக செயல்பட்டு வருகிறார். பூலித்தேவன் பிறந்த நாளில் நெற்கட்டாஞ்செவல் சென்று பூஜைகள் செய்வது, இதர நிகழ்ச்சிக்களுக்கு ஏற்பாடு செய்வது என! ஆலய ஈடுபாடு அதிகம் கொண்டவர். தென்காசி கோயிலில் பராக்கிரம பாண்டியனுக்கு அண்மையில் சிறப்பு செய்தார். அவரது தொண்டினை எடுத்துச் சொல்லி, அவருக்கு கௌரவம் கொடுக்க வேண்டும் என்பது விருப்பம்.
அடுத்து, குழுவில் அண்மையில் நண்பர் ஜேகே மூலம் இணைந்த விஜய். இவர், @ArchivesofHindustan என்ற யுடியூப் சேனல் நடத்தி வருகிறார். ஒரு மில்லியன் சப்ஸ்க்ரைபர்ஸ் இருக்கிறார்கள். ஆலய வீடியோக்கள் அழகாக எடுத்துப் பதிவு செய்திருக்கிறார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ஜேகேயைப் பார்த்தேன். இவர்கள் பின்னர் வந்து சேர்ந்ததால், கவனிக்கத் தவறிவிட்டேன். இடையில் அடியேனுக்கு காட்டாங்குளத்தூர் ரகுநாதன் ஸ்வாமியும், அறந்தை மணியன் அவர்களும் பொன்னாடை எடுத்துக் கொண்டு நிகழ்ச்சியின் நடுவே அருகிலேயே நின்று கொண்டு அணிவித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்கள். ஆயினும், நிகழ்ச்சி முடிந்த பிறகு தான் நண்பர்கள் இருவரும் கண்ணில் பட்டார்கள். எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.
இந்த நிகழ்ச்சியே, தமிழ் தினசரி தளத்துக்கு உதவுபவர்கள், குழுவில் பயணிப்பவர்கள், நண்பர்களுக்கு சிறப்பு செய்து கௌரவப் படுத்தத்தான். அப்படி இது குடும்ப விழா போன்று நட்பு விழாவாக அமைந்தது என்பதுதான் வந்திருந்த அனைவரின் ஈர்ப்புக்கும் ஈடுபாட்டுக்கும் காரணம்.
குழுவில் உள்ள மதுரை கணபதி சுந்தரம் சார், இப்போதான் வெளிநாடு சென்ற ஆறுமுக கனி ஆகியோர் ஒரு தொகை அனுப்பி நிகழ்ச்சிக்கு உதவியாக வைத்துக் கொள்ளுமாறு சொன்னார்கள். முக்கியமாக இந்த நிகழ்ச்சி திட்டமிடப்பட்ட போதே, முன்னதாகவே ஹால் புக் செய்து, அது என் சார்பிலானது என்று சொல்லி ஊக்கமூட்டிய கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் அவர்கள், ஷால் பொறுப்பு என்னுடையது என்று சொல்லி மதுரையில் இருந்து நம் நிகழ்ச்சிக்காகவே வந்து இரு நாட்கள் தங்கி, உற்சாகமூட்டிய நா.ஸ்ரீனிவாசன்ஜி (பொதுவாக ஞாயிறு வெளி நிகழ்ச்சிக்கு வரமாட்டார். குடும்பத்துக்காக ஒதுக்குவார். நாமும் ஒரே குடும்பம் என்பதாலோ என்னவோ நமக்கும் ஒதுக்கி வந்திருக்கிறார்.) அனைவருக்கும் நன்றி சொல்ல வேண்டும்.
அடுத்த வருட விழாவை மேலும் சிறப்பாக திட்டமிட ஊக்கமும் உற்சாகமும் பெற்றேன். முக்கியமாக, இந்த தினத்தில் என் 50ம் அகவையு தொடங்க, என் பத்திரிகை உலக வாழ்வின் 25ம் ஆண்டும் தமிழ் தினசரியின் 10ம் ஆண்டும் என முப்பெரும் விழாவாக இது அமைந்துவிட்டது. எனவே ஆன்மிக ரீதியாக நிகழ்ச்சியை நடத்த எண்ணம் கொண்ட போதுதான், தபோவனம் ஸ்ரீ ஞானானந்த கிரி ஸ்வாமிகளின் இசைச் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்வோம் என்று தோன்றியது.
தற்போது தபோவனத்தில் கும்பாபிஷேகத்தை ஒட்டிய பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் ஜூன் மாதம் 16ம் தேதி அங்கே கும்பாபிஷேகம். இது குறித்துச் சொன்னபோது, தபோவன நிர்வாகிகள் திரு. கே.அமர்நாத அவர்களும், திரு. ஸ்ரீகுமார் அவர்களும் ஆசி அளித்து அடியேனுக்கு உதவிகரமாக முன்வந்தார்கள்.
அதன்படி, ஸ்வாமிகள் பற்றி, ஹரிகதை சிந்துஜா சிறப்பாக, இசைச் சொற்பொழிவு நடத்தி அனைவரையும் ஸ்வாமிகளின் எண்ணத்தில் லயிக்கச் செய்திருந்தார். குறுகிய நேர அவகாசம் என்றாலும் சிறப்பாக ஸ்வாமிகள் பற்றிய சம்பவங்களை இசையுடன் கலந்து கொடுத்து கட்டிப் போட்டார். இரவு எட்டு மணி ஆன பிறகுதான் பலர் தன்னுணர்வு பெற்றதை உணர முடிந்தது. அவருக்கும் நம் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டோம். அன்பர்கள் அனைவருக்கும் நம் அயோத்தி ராமனின் அருள் நீங்காது இருக்கட்டும்!
அன்பன்,
செங்கோட்டை ஸ்ரீராம்