18 சதவீத ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் 99 சதவீத பொருள்களைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி உறுதிபடக் கூறியுள்ளார்.
மும்பையில் கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு பேசினார் பிரதமர் மோடி! அப்போது அவர், பல ஆண்டுகளாகவே நம் நாட்டுக்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை தேவையாக இருந்தது; அதை தற்போது அமல்படுத்தியதன் மூலம் வர்த்தகச் சந்தையில் இருந்த பல்வேறு முரண்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. பொருளாதாரமும் வெளிப்படைத்தன்மை கொண்டதாக மாறியிருக்கிறது. ஜிஎஸ்டி முறைக்கு முன்னர் 65 லட்சம் வணிக நிறுவனங்கள் மட்டுமே பதிவு செய்திருந்தன. தற்போது இந்த எண்ணிக்கை மேலும் 55 லட்சம் உயர்ந்துள்ளது என்றார்.
மேலும், வணிக நிறுவனங்களுக்கு மிகவும் சுமுகமான முறையாக ஜிஎஸ்டி வரி முறையை மாற்ற வேண்டும் என்பதே அரசின் கொள்கை என்று குறிப்பிட்டார் மோடி.
ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை தற்போது பரந்த அளவில் நிலைப்படுத்தப் பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களையும் உள்ளடக்கி, 99 சதவீத பொருட்களை 18 சதவீத ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப் படும் என்று உறுதிபடக் கூறினார் பிரதமர் மோடி.