மதுரை: மதுரையில் அமையவிருக்கும் மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனை மூலம் தென் மாவட்ட தமிழர்களுக்கு உயர் தர சிகிச்சை கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
மதுரையில் நாளை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டுவதற்காக, பிரதமர் நரேந்திர மோடி நாளை மதுரை வருகிறார். இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர்கள், எம்பி.,க்கள் என பலரும் கலந்து கொள்கின்றனர்.
இந்த அடிக்கல் நாட்டு விழா மைதானத்தைப் பார்வையிட வந்திருந்த தமிழக சுதாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
மதுரையில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனையால், தமிழகத்துக்கு குறிப்பாக தென் தமிழகத்திற்கு மிகப் பெரும் நன்மை உண்டகும். எய்ம்ஸ் மருத்துவமனையில் 100 மருத்துவர், 60 நர்ஸ்கள் மற்றும் 750 படுக்கை வசதி அமையும். மருத்துவ மேற்படிப்பிற்கு 350 இடங்கள் கிடைக்கும். இது உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சி மையம் உள்ள மருத்துவ வளாகமாக அமையும். அம்மாவின் கவைு திட்டத்தை பிரதமர் மோடி நிறைவேற்றியுள்ளார்.
இது தவிர மதுரை அரசு மருத்துவமனை வளாகத்தில் 150 கோடி செலவில் 350 படுக்கை வசதிகளுடன் சிறந்த உயர் சிகிச்சை பிரிவு அமைகிறது. இதேபோல் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் ரூ.150 கோடி செலவில் 290 படுக்கை வசதிகளுடன் சிறப்பு உயர் சிகிச்சை மையமும். தஞ்சை மருத்துவ கல்லூரியில் ரூ.150 கோடி செலவில் 300 படுக்கை வசதிகளுடன் சிறப்பு உயர் கிகிச்சை பல்நோக்கு மருத்துவமனையும் அமைய உள்ளது.
மொத்தம் ரூ.450 கோடி செலவில் 940 படுகை வசதி கொண்ட சிறப்பு பல்நோக்கு மருத்துவமனைகளை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார், இங்கு எம்.ஆர்.ஐ , சி.ஆர்.ஐ மற்றும் டயாலிஸிஸ், டிரான்ஸ்பிளான்ட் எனும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அரங்குகளும் மக்களுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதன் மூலம், தமிழக மருத்துவத் துறை மாற்றமும் , முன்னேற்றமும் அடையும்.
எய்ம்ஸ் மருத்துவமனை கட்டடப் பணிகள் 3 முதல் 4 ஆண்டுகளில் முடிவடையும் என்றார் அமைச்சர் விஜயபாஸ்கர்!