தரிசனமும்; தரிசனமும்!
(தை ஹஸ்தம், கூரத்தாழ்வான் திருநட்சத்திரமான இன்று(26-Jan-2019) அவரின் வைபவம் அறிந்திடுவோம்.)
by Sri #APNSwami
????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????
கலி புருஷனின் கொட்டத்தை அடக்கியவர் ராமானுஜர். இதனால் அவர் மீது பெருத்த கோபத்தில் இருந்தான் கலி புருஷன். ராமானுஜரைப் பழி வாங்கும் சமயத்தை எதிர் நோக்கியிருந்தான் கலிபுருஷன். எம்பெருமானார்க்கே ( ராமானுஜர்க்கே ) சோதனைகள் உண்டு என்றால் நம்போல்வார் எம்மாத்திரம்? என்பதை உணர்த்த எம்பெருமான் செய்த திருவிளையாடல்.
சோழ அரசன் சில மந்திரிகளின் துர்போதனையால் மனம் மயங்கினான். நல்ல விஷயத்தில் மன்னனை ஈடுபடுத்த வேண்டியவ மந்திரிகள் மத துவேஷத்தை உண்டாக்கினர்.
ஒரு மதத்தை அழித்துதான் மற்றொரு மதத்தை நிலைநிறுத்த வேண்டுமா என்ன? பாண்டித்யம் கொண்டு வலியுறுத்த வேண்டியதை பலாத்காரமாகச் செய்ய நினைத்தான் அரசன். இதற்காக பல வழிகளைக் கையாண்டான். குறிப்பாக, ‘சிவனை விட மேலான தெய்வம் இல்லை’ என்பதை ஒப்புக் கொள்ளும்படி எல்லோரையும் நிர்ப்பந்தம் செய்தான்.
வைணவமே உயிர் மூச்சு; என் ஆதிப்பிரான் நிற்க மற்றைத் தெய்வம் நாடுதிரே’ என்ற ஆழ்வாரின் கொள்கையில் உறுதியாக நின்றவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டனர்.
வாளையும், வேலையும் கொண்டு வீரத்தால் எதிரிகளை பயமுறுத்த வேண்டியவன், சாதுக்களை துன்புறுத்தினான். உண்மையில் கலி புருஷன் கொஞ்சம், கொஞ்சமாக வெற்றி பெறுவதாகத் தோன்றியது.
“அரசே, இந்த எளிய வைஷ்ணவர்களை தாங்கள் நிர்ப்பந்தம் செய்து என்ன பயன்? இவர்கள் எல்லோருக்கும் தலைவரான ராமானுஜர் ஒருவர் ஒப்புக்கொண்டால் மொத்த வைணவமும் மண்ணுள் புதையுண்டு போகும். எனவே, ராமானுஜரை சபைக்கு வரவழைப்போம். அவரைப் பணிய வைப்போம்” என்று துர்போதனை செய்தான் மந்திரி. அதனால், ராமானுஜருக்கு ஓலை அனுப்பினார்.
சிஷ்யர்கள் மதி கலங்கி, என்ன செய்வது? என்று அறியாமல் திகைத்தனர். ராமானுஜரோ, அரசனின் அந்தரங்கம் (உள்ளம்) அறியாதவர். அதேசமயம் அரச சபைக்கெல்லாம் போவதற்கு விருப்பமில்லாதவர்.
இதற்குள்ளாக ஆசாரியரான பெரிய நம்பிகளும், சீடரான கூரத்தாழ்வானும் அங்கு விரைந்து வந்து, பெரும் ஆபத்து சூழ்ந்துள்ளதை அறிந்து, ” உடனடியாக ராமானுஜர் திருவரங்கம் விடுத்து புறப்பட வேண்டும்” என்று தீர்மானித்தனர்.
அரசனின் சேவகர்களோ ஆசிரமத்தின் வாசலில் ராமானுஜரை அழைத்துச் செல்வதில் உறுதியாக இருந்தனர். மிகுந்த சாதுர்ய முடைய கூரத்தாழ்வான், தனது ஆசார்யரின் துறவறக் கோலத்தைத் தான் ஏற்றுக்கொண்டார்.
ஆம், இனிமையான இல்லறத்தில் உள்ள கூரத்தாழ்வான் காவித்துணியை தானுடுத்தி, கையில் த்ரிதண்டம் (முக்கோல்) ஏந்தினார்.
அரசனுக்கு ராமானுஜரைத் தெரியாது. காவியுடுத்தியவர் ‘வைணவத் தலைவர்’ எனும் எண்ணத்துடன் இருந்தான்.
பெரிய நம்பிகளும், கூரத்தாழ்வானும் அரச சபைக்கு வந்தனர். ‘வைணவர்கள் பயந்தவர்கள்’ என்று நினைத்த அரசனுக்கு இவர்களின் கம்பீரம் வியப்பை அளித்தது. அவர்களின் பார்வையின் கூர்மையால் மன்னன் நிலை குலைந்தான்.
“ம்… எழுதி கையெழுத்திடுங்கள்” அவன் ஆழ்வானை ராமானுஜராகத்தானே நினைக்கிறான். எனவே, ‘சிவனை விட மேலான தெய்வமில்லை என்று கையெழுத்திடுங்கள்’ என ஓர் ஓலை அவரிடம் அளித்தான்.
இங்குதான் கூரத்தாழ்வானின் கூரிய அறிவு வேலை செய்தது. மெதுவாக ஓலைதனை வாங்கியவர், எழுத்தாணி எடுத்தார். ஆவலுடன் அரசன் அவரையே பார்க்கிறான். ‘தான் வெற்றி பெற்றுவிட்டோம்’ எனும் பூரிப்பு அவன் முகத்தில் ஜொலித்தது.
ஆழ்வான், ‘சிவாத் பரதரம் நாஸ்தி’ (சிவனைவிட மேலான தெய்வம் இல்லை) எனும் சம்ஸ்கிருத வாக்யத்தின் கீழே, ‘த்ரோணமஸ்தி தத:பரம்’ என்று எழுதினார். அதாவது, சமஸ்கிருத மொழியின் சிறப்பு இங்கு அற்புதமாக எடுத்தாளப்படுகிறது. சிவம் என்பதற்கு முக்கண்ணனாகிய பரமசிவனை அரசன் பொருளாகக் கொண்டான். ஆனால், கூரத்தாழ்வான் கைக்கொண்ட பொருள் வேறு. ‘சிவம்’ என்பதற்கு ஓர் அளவை என்பது பொருள். அதாவது, தானியங்களை அளப்பதற்கு குருணி, பதக்கு என்றவாறு அளவைகள் உண்டு. இதில் ஒன்றைவிட மற்றொன்று பெரியது. ‘த்ரோணம்’ என்பதற்கு ‘பதக்கு’ என்பது பொருள்.
இப்போது ‘சிவம்’ என்பதற்கு ‘குருணி’ சிறிய அளவுள்ள ஒரு அளவை என்பதாக ஆழ்வான் பொருள் கொண்டான். ‘சிவாத் பரதரம் நாஸ்தி’ (சிவனைவிட மேலானவர் இல்லை) என்ற பொருளில் அரசன் நிர்ப்பந்தம் செய்ய, இவர், ‘குருணி’ என்ற அர்த்தத்தை வைத்து, “ஏன் இல்லை… குருணியைவிட பதக்கு அளவில் பெரியதன்றோ” (த்ரோணம் அஸ்தி தத:பரம்) என்று கேலி செய்து கையெழுத்திட்டார்.
‘எந்தவொரு மதத்தையும் நிர்ப்பந்தத்தினால், பலவந்தத்தினால் நிலைநிறுத்த முடியாது’ என்று உணராத அரசன் கொதித்தெழுந்தான். இதுவரை தன்னை எவருமே இவ்விதம் அவமானம் செய்த தில்லை. ஓர் எளிய வைணவன் எள்ளி நகையாடுவதா! கண்கள் சிவந்தன. உதடுகள் துடித்தன. கோபத்தில் வசமிழந்தான். பாவத்திலும் பெரும் பாவத்தைச் செய்யத் துணிந்தான்.
வாளையும், வேலையும் வீசியெறிந்து எதிரிகளைத் தாக்கும் யுத்தத்தில் வல்லவன், கூர்மையான எழுத்தாணியின் தாக்குதலில் நிலை குலைந்தான்.
உண்மையில் கூரத்தாழ்வான் இங்கு சிவனை நிந்திக்கவில்லை. வெகுண்ட அரசன் இந்த இரு வைஷ்ணவர்களுக்கும் என்ன தண்டனையளிப்பது? என்று ஆலோசித்தான்.
இவர்களின் கூர்மையான பார்வையினால், தான் தாக்குண்டது மனத்தில் நிழலாடியது. எனவே, ‘அந்தக் கண்களை (கண் விழிகளை) பிடுங்கி எறிந்துவிட வேண்டும்’ என்று கொடூரமான தண்டனை விதித்தான்.
இப்படி, அரச சபையில் ஏதாவது அசம்பாவிதம் நிகழும். அது ராமானுஜருக்கு ஆபத்தாகும் என்று எண்ணித்தானே, பெரிய நம்பிகளும், ஆழ்வானும் ராமானுஜரைத் தடுத்து தாங்கள் வந்தனர். எண்ணிய வாறே நடந்தது. கொடுமையான அரசன் பெரிய நம்பிகளின் விழிகளை நோண்டினான். வலியிலும், வேதனையிலும் அம்மகாத்மா துடித்தார்; துவண்டார்.
கூரத்தாழ்வானோ! தனது கம்பீரம் துளியும் குறையாமல், “நீ என்ன எனக்கு தண்டனையளிப்பது. கொடுங்கோன்மை கொண்ட உன்னைப் பார்த்ததே எனக்கு தண்டனைதான். நான் செய்த பாபம்தான். இத்தகையதொரு பாபத்தைச் செய்த என் கண்களை நானே பறித்துக் கொள்கிறேன்” என்று கையிலிருந்த எழுத்தாணியால் தன் கண்களைத் தானே பிடுங்கி எறிந்தார்.
எத்தகையதொரு வைராக்யமும், குரு பக்தியும் இருந்தால் இதைச் செய்ய முடியும். தரிசனம் என்றால் சம்ப்ரதாயம் என்பது பொருள். தரிசனம் என்றால் பார்வை என்பதும் பொருள். இப்போது, ராமானுஜ தரிசனத்தை (சம்ப்ரதாயம்) காத்திட பெரிய நம்பிகளும், கூரத்தாழ்வானும் தங்கள் தரிசனத்தை (பார்வை) இழந்தனர். இவர்கள் தியாகத்தின் திருவுருக்கள்.
அன்புடன்,
ஸ்ரீ ஏபிஎன் ஸ்வாமி
Sri #APNSwami
இது போன்ற கட்டுரைகளைப் படிக்க…
https://apnswami.wordpress.comமேலும்… நாட்டு நடப்புகளுடன் சுவையான ஸம்ப்ரதாய விஷயங்களை அறிந்திட https://apnswami.wordpress.com/blogpages/
மற்றவர்களுக்கும் பகிர்ந்திடுங்கள்… உங்கள் கருத்துக்களையும், சந்தேகங்களையும் பதிவு செய்யுங்கள்…